சென்னை ஐகோர்ட் நீதிபதி முருகேசன்- டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதியாக 26ம் தேதி பதவியேற்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான டி.முருகேசன், டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான பதவியேற்பு விழா வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் டி.முருகேசன். இவரை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து மத்திய சட்டத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேனி மாவட்டம், கம்பத்தை அடுத்த சி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நீதிபதி டி.முருகேசன். சாதாரண விவசாய குடும்பத்தில் கடந்த 10.6.1951 அன்று பிறந்த அவர், கடந்த 1975ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞராக பதிவு செய்தார். அதன்பிறகு அரசு பிளீடராக பணியாற்றினார்.
கடந்த 2000ம் ஆண்டு மார்ச் மாதம் டி.முருகேசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்பு 2001ம் ஆண்டு ஜுன் மாதம் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக அவர் பதவி ஏற்றார். கடந்த 12 ஆண்டுகள் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி உள்ளார்.
தலைமை நீதிபதியாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டிருப்பதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் நீதிபதி டி.முருகேசன் நேரில் சென்று அங்குள்ள அலுவலர்களுக்கு தனது நன்றி தெரிவித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications