நபிகள் நாயகத்தை தவறாக சித்தரித்த படத்தை எதிர்த்து போராட்டம்: நெல்லையில் பதட்டம்
நெல்லை: நபிகள் நாயகத்தை தவறாக சித்தரித்து எடுக்கப்பட்ட படத்தை கண்டித்து நெல்லையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை, போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். இதில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களை வீசியதால் நெல்லையில் பதட்டம் ஏற்பட்டது.
இஸ்லாத்தையும், நபிகள் நாயகத்தையும் தவறாக சித்தரித்து எடுக்கப்பட்ட அமெரிக்க படத்துக்கு எதிராக நெல்லையில் தமமுகவினர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை மாநகர துணை கமிஷனர் மயில்வாகணன் தலைமையிலான போலீசார் தடுக்க முயன்றனர். இதில் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலரை கைது செய்தனர்.
போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும், கைது செய்தவர்களை விடுதலை செய்ய கோரியும், இரவு 7.30 மணி அளவில் மேலப்பாளையம சந்தை முனையில், உம்மதே முஸ்லிம் அறக்கட்டளை நிறுவனர் காஜாநிஜாமுதீன் தலைமையில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது இரவு 9 மணி வரை நீடித்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீசாரை திட்டியதோடு சாலை மறியலில் ஈடுபடவும் முயன்றனர்.
அதை கூடுதல் கமிஷனர் சேவியர் தலைமையிலான போலீசார் தடுத்தனர். மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் மீது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சராமரியாக கற்களை வீசினர். இதையடுதது போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். ஆனால் மக்கள் ஓடுவதும், சிறிது நேரத்திற்கு பிறகும் மீண்டும் வந்து போலீசார் மீது கல்வீசுவதுமாக நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் அப்பகுதியில் பதட்டம் நீடித்தது.












Click it and Unblock the Notifications