தெலுங்கானா அறிவிப்பு வெளியாகிறது- காங்கிரஸ் ஜோதியில் ஐக்கியமாகிறார் டிஆர்எஸ் சந்திரசேகர் ராவ்

ஆந்திர மாநிலத்தைப் பிரித்து ஹைதராபாத்தை தலைநகராகக் கொண்டு தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பது அரை நூற்றாண்டுகால கோரிக்கை. இதற்கான போராட்டங்கள் நாட்டையே உலுக்கியவை. தெலுங்கானா தனி மாநிலம் கோரி உயிரை மாய்த்தவர்கள் ஏராளம்! இதைத் தொடர்ந்து தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது குறித்து ஆராய கிருஷ்ணா கமிஷன் அமைக்கப்பட்டது.
அதே நேரத்தில் ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கூடாது என்று இதர பகுதியினர் குரல் கொடுத்தனர். தெலுங்கா ராஷ்டிரிய சமிதி கட்சிதான் தொடர்ந்து தெலுங்கானாவுக்கு குரல் கொடுத்து வருகிறது. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த இந்த கட்சி, தெலுங்கானா அமைக்காததால் கூட்டணியிலிருந்து விலகியது. தெலுங்கா தனி மாநிலக் கோரிக்கைக்கான போராட்டங்களை முன்னெடுத்த இந்தக் கட்சி, ஒருகட்டத்தில் தெலுங்கானா தனி மாநிலத்தை காங்கிரஸ் அமைத்தால் அப்படியே கூண்டோடு கட்சியையே காங்கிரஸில் இணைத்தேவிடுவேன் என்றும் அறிவித்திருந்தார்.
ஆனால் தெலுங்கு தேசம் கட்சியோ தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே வருகிறது. தெலுங்கானா தவிர்த்த இதரபகுதி காங்கிரசாரோ கட்சியைவிட்டே வெளியேறிவிடுவோம் என்று எச்சரித்து வருகின்றனர்.
இதனால் மத்திய அரசு தெளிவான ஒரு முடிவை எடுக்காமல் இருந்து வந்தது. ஆந்திர மாநில பேரவையில் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை ஏற்று தீர்மானம் கொண்டுவந்தால்தான் மத்திய அரசால் நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த செல்வாக்கு முழுவதையுமே ஜெகன்மோகன் ரெட்டி அள்ளிக் கொண்டு போய்விட்டார். ஏற்கெனவே பிரஜா ராஜ்யம் கட்சியைத் தொடங்கி இருந்த சிரஞ்சீவியால் எப்படியும் தங்களது வாக்கு வங்கி பறிபோய்விடும் என்று கருதி அவரிடம் பேரம் பேசி கட்சியையே இணைக்க வைத்தது காங்கிரஸ். ஆனாலும் ஜெகனின் செல்வாக்கை அசைக்க முடியவில்லை. ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் மக்களவைக்கான தேர்தலும் நெருங்கி வருவதால் வியூகம் வகுத்தாக வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானது காங்கிரஸ். மேலும் எகிப்து நாட்டில் அரசுக்கு எதிராக பிரம்மாண்டமான பேரணியை நடத்தியதுபோல் செப்டம்பர் 30-ந் தேதி மாபெரும் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது
ஏற்கெனவே பாரதிய ஜனதா கட்சி தெலுங்கானா விவகாரத்தில் உறுதியாக குரல் கொடுத்து வருவதால் அப் பகுதியில் அந்தக் கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் பாஜக பக்கம் சாயக் கூடிய நிலை இருக்கிறது. இதனால் இப்பொழுது தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட்டாக வேண்டிய நெருக்கடியில் காங்கிரஸ் இருக்கிறது. இப்படி தெலுங்கானா அறிவிப்பு வெளியிட்டால் தெலுங்கானா பகுதியில் செல்வாக்கை பெறுவதுடன் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி என்ற ஒரு கட்சியே காங்கிரசில் இணைவதும் தமக்கு பெரிய லாபம் என்பது காங்கிரஸின் கணக்கு.
இது தொடர்பாக ஆந்திர மாநில காங்கிரஸ் விவகாரங்களைக் கவனிக்கும் மத்திய அமைச்சர் வயலார் ரவி, டெல்லியில் கடந்த சில நாட்களாக தங்கியிருக்கும் சந்திரசேகர்ராவுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைகளைத் தொடர்ந்து இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திரசேகர்ராவ் சந்திக்க உள்ளார். தெலுங்கா தனி மாநிலம் குறித்த அறிவிப்பும் தெலுங்கா ராஷ்டிரிய சமிதி என்ற கட்சி காங்கிரசில் கரையப் போகிற அறிவிப்பும் எந்த நேரத்திலும் வரலாம் என்பதே டெல்லி தகவல்கள்!
இனி கண்ணைப் பறிக்கும் அந்த கலர் துண்டைக் கழற்றிவிட்டு கதர்துண்டுதானா மிஸ்டர் கேசிஆர்!












Click it and Unblock the Notifications