கண்ணாடியை உடைத்த லாரியை விரட்டி சென்று பிடித்த அரசு பஸ் டிரைவர் லாரியை ஏற்றிக் கொலை

பெங்களூரில் இருந்து ஈரோட்டிற்கு தமிழ்நாடு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை சுந்தர்ராஜன் (38) என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார்.
பஸ் ஓசூரை கடந்து ராயக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி பஸ்சை உரசியது. இதனால் பஸ் டிரைவர் சுந்தர்ராஜன் பஸ்சை ஓரமாக நிறுத்தி, லாரி டிரைவரை தட்டிக் கேட்டார்.
பதிலுக்கு அந்த லாரி டிரைவர் ஆபாசமாகத் திட்டினார். வாய்த்தகராறு முற்றவே, ஆவேசமடைந்த லாரி டிரைவர் தனது லாரியில் வைத்திருந்த ஒரு இரும்பு கம்பியை எடுத்து பஸ்சின் பக்கவாட்டில் உள்ள ஒரு கண்ணாடியை உடைத்து விட்டு லாரியை ஓட்டிச் சென்றார்.
இதையடுத்து பஸ் டிரைவர் சுந்தர்ராஜன் அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து ஏறி, அந்த லாரியை பின் தொடர்ந்து சென்று உத்தனப்பள்ளி அருகே லாரியை மடக்கினார்.
லாரி முன் நின்ற பஸ் டிரைவர் சுந்தர்ராஜன், லாரி டிரைவரை கீழே இறங்கச் சொன்னார். போலீஸ் நிலையத்திற்கு செல்லலாம் என்று கூறினார்.
ஆத்திரமடைந்த லாரியின் டிரைவர், லாரியை வேகமாக முன்னோக்கி எடுத்து சுந்தர்ராஜன் மீது ஏற்றினார். இதில் அவரது இரு கால்களும் உடைந்து, நசுங்கின. சுந்தர்ராஜன் மீது லாரியை ஏற்றிய டிரைவர் வேகமாக லாரியை அங்கிருந்து ஓட்டிச் சென்றுவிட்டார்.
காணாமல் போன மனித நேயம்:
இதையடுத்து ரோட்டியேலே சுந்தர்ராஜன் துடிதுடித்தார். அவரது உடலில் இருந்து ரத்தம் ஏராளமாக வெளியேறிக் கொண்டிருந்தது.
சுந்தர்ராஜன் "தண்ணீர், தண்ணீர்'' என்று கதறினார். சில பொதுமக்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்தனர். அவரைக் காப்பாற்ற அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்தனர். ஆனால் யாரும் வாகனத்தை நிறுத்தவில்லை.
அதேபோல அந்த வழியாக சென்ற சில பஸ் டிரைவர்களும், இதைப் பார்த்துவிட்டு நிற்காமல் சென்று விட்டனர். இதையடுத்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் தரப்பட்டது.
சுமார் 45 நிமிடம் டிரைவர் சுந்தர்ராஜன் நடுரோட்டிலேயே துடித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வந்து அவரை ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.
நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications