மதுவிலக்கு அமல்படுத்த மதிமுக உண்ணாவிரதம்: மறைமலைநகரில் வைகோ பங்கேற்பு
சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி, காந்தி ஜெயந்தி தினமான இன்று மதிமுக சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மறைமலைநகரில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி காந்தி ஜெயந்தி தினமாக இன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மதிமுக சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று மதிமுக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
பூரண மதுவிலக்கை தமிழகத்தில் நிலைநாட்டுவதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு மதிமுக திட்டமிட்டுள்ளது. அதன்படி பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி மகாத்மா காந்தி பிறந்த நாளான இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மதிமுக உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளது என்று மதிமுக அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதன்படி, பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் மதிமுக சார்பில் இன்று உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகர் நகராட்சி திடலில் காலை 9 மணிக்கு உண்ணாவிரதத்தை அவைத்தலைவர் துரைசாமி துவங்கி வைத்தார். இதில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
மதிமுக மாநில துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு, மாவட்ட துணை செயலாளர் சிங்கை ஆனந்தன், நகர செயலாளர்கள் ரவி, சதீஷ்பாபு, ஒன்றிய செயலாளர் காசி மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று மாலை 5 மணி வரை முடிவடையும் உண்ணாவிரதத்தை கட்சி பொருளாளர் மாசிலாமணி முடித்து வைக்க உள்ளார். உண்ணாவிரதத்தில் பங்கேற்க காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான கட்சி தொண்டர்கள் வந்துள்ளனர். செங்கல்பட்டு டிஎஸ்பி தணிகைவேல் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications