கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
கரூர் : கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்த கோரி காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் எம்.பி. வெளியிட்ட அறிக்கையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி துவக்கப்படும் நிலையில் சிலர் வேண்டும் என்றே தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் சுமார் 3 ஆயிரம் மெகா வாட் அதிகமாக மின் பற்றாக்குறை உள்ளது. இதனால் பொதுமக்களும், தொழிற்சாலைகளும், அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆனால் சிலர் வேண்டும் என்றே வேறு நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பாவி மக்களை திசை திருப்பி வருகின்றனர். எனவே கூடங்குளத்தின் அவசியம் மற்றும் அவசரம் குறித்து உணர்த்தும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூரில் தாலுக்கா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தலைவர் பேங்க்.சுப்பிரமணி தலைமையிலும், கரூர் நகரத் தலைவர் சுப்பன், குளித்தலை நகர தலைவர் சர்புதீன், தாந்தோனி நகரத் தலைவர் ராமலிங்கம், இனாம் கரூர் நகரத் தலைவர் அங்கமுத்து ஆகியோர் முன்னிலையிலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து பலரும் கூடங்குளம் அணு உலையை திறக்க வேண்டும் என்றும், போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரை கைது செய்ய கோரியும் வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications