காவிரி: கர்நாடகத்தின் மனு மீது வரும் 8ம் தேதி விசாரணை

தமிழகத்துக்கு திறந்துவிடப்பட வேண்டிய காவிரிநீரை கர்நாடகம் இந்த ஆண்டு திறந்துவிடவில்லை. இதனால் குறுவை சாகுபடி பொய்த்தது. சம்பா சாகுபடிக்கு தண்ணீரை திறந்துவிடக் கோரி தமிழகம் போராடியது. இதன் விளைவாக பிரதமர் தலைமையில் காவிர் நதிநீர் ஆணையக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம் கோரிய அளவைவிடக் குறைவாக நாளொன்றுக்கு 9 ஆயிரம் கன அடிநீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டது. ஆனால் இதை கர்நாடகம் ஏற்க மறுத்தது.
கர்நாடகத்தின் நிலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டுக்கு நாளொன்றுக்கு 9 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு கர்நாடகம் நீரைத் திறந்துவிட்டாலும் தற்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
அதில், கர்நாடக அணைகளில் போதுமான அளவுக்கு நீர் இருப்பு இல்லை. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட இயலாது என்று கூறப்பட்டிருந்தது. இம்மனுவை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கர்நாடக தரப்பில் வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இம்மனு மீது வரும் 8-ந் தேதி திங்கள்கிழமையன்று விசாரணை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications