நெல்லையில் மின் இணைப்பு பெற போலி இருப்பிட சான்றிதழ் அளித்த பெண்
நெல்லை: நெல்லையில் மின் இணைப்பு பெறுவதற்காக தாலுக்கா அலுவலக சீல், தாசில்தாரின் கையெழுத்து கொண்ட போலி இருப்பிட சான்றிதழை அளித்த பெண் பிடிப்பட்டார். இது போன்ற மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பலை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை டவுன் தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்த கண்ணன். இவரது மனைவி திரவுபதை. இவர் தனது புதிய வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக நெல்லை பழைய பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் இருப்பிட சான்று இணைத்து மனு செய்தார்.
இருப்பிட சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அதன் உண்மை தன்மையை அறியும்படி, நெல்லை தாலுக்கா அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு நடத்திய ஆய்வில் அது போலியானது என்று தெரியவந்தது.
இருப்பிட சான்றிதழில் இடம் பெற்றிருந்த கோபுர முத்திரை போலியானது. மேலும் தாசில்தார் பெயருக்கான இடத்தில் சுப்பையா என்று தவறாக குறிப்பிட்டு கையெழுத்திடப்பட்டு இருந்தது. இது குறித்து மேல் விசாரணை நடத்துமாறு தாசில்தாருக்கு மின்வாரிய செயற்பொறியாளர் பரிந்துரை செய்தார்.
இது குறித்து நெல்லை தாசில்தார் கதிரேசன் நெல்லை டவுன் உதவி கமிஷனர் அலுவலகம், பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் சுத்தமல்லி பகுதியில் போலி பட்டா தயாரித்து விற்பனை செய்தும், நெல்லை நீதிமன்றத்தில் போலி ஜாமீ்ன் தயாரித்து கைதிகளை ஜாமீனில் எடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலி பட்டா, சான்றிதழ்கள் தயாரிக்கும் கும்பலை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications