வெளிநாட்டில் வேலை எனக் கூறி ஆன்லைனில் மோசடி- என்ஜினியர் கைது
சென்னை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஆன்லைனில் விளம்பரம் செய்து, லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்த என்ஜினியரை, போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவைச் சேர்ந்தவர் வேணுகோபால் நாயுடு. எம்சிஏ படித்துள்ள இவர், சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒரு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
அமெரிக்காவில் அதிக சம்பளத்துடன் கூடிய வேலை வாங்கி தருவதாக, ராமசந்திரன் ரெட்டி(38) என்பவர் ஆன்லைனில் விளம்பரம் வெளியிட்டார். அதை நம்பி அவரிடம் ரூ.4 லட்சம் பணத்தை கட்டினேன். ஆனால் அவர் கூறியது போல எனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். அப்போது ஆன்லைனில் விளம்பரம் வெளியிட்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ராமச்சந்திரரெட்டி, சென்னையில் இருப்பது தெரியவந்தது.
மேலும் இவர் சென்னையில் இருந்து கொண்டே, அமெரிக்காவில் இருப்பதாக கூறி பலரிடமும் பணமோசடி செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2 மாதங்களாக போலீசார் அவரது செல்போன் பேச்சுகளை கண்காணித்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்த ராமசந்திரன் ரெட்டியை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பலரிடமும் லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. மேலும் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த அவர், என்ஜினியரிங் படித்து விட்டு, வேலை கிடைக்காததால் இது போன்ற மோசடி பணியில் ஈடுபட்டது தெரியவந்தது.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவது மட்டுமின்றி, பட்டப்படிப்பில் தோல்வி அடைந்த மாணவர்களை பாஸ் செய்ய உதவுவதாக கூறியும், ராமசந்திரன் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications