நெல்லையில் காங்கிரஸ் அலுவலகம் நாளை முற்றுகை: அணு உலை எதிர்ப்பு கட்சிகள் அறிவிப்பு
நெல்லை: நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தை நாளை முற்றுகையிட போவதாக அணு உலை எதிர்ப்பு இயக்க ஆதரவு கட்சிகள் அறிவித்துள்ளன.
இது குறித்து நெல்லை மாவட்ட சிபிஐ மாவட்ட துணை செயலாளர் சேவியர், மா.லெனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் ரமேஷ், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் லேனா குமார், தமுமுக மாவட்ட தலைவர் மைதீன் பாரூக், பாமக மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன், மாவட்ட அமைப்பாளர் ரவி தெய்வேந்திரன், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் நிருபர்களை சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது,
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம் 400 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதை வழி நடத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் உதயகுமார். இவரது வீடு, பள்ளிகூடம் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று இவரது வீட்டை முற்றுகையிட போவதாக குமரி காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர்.
இதுவரை உதயகுமார் மீது நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கும், இந்த அறிவிப்புக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. உதயகுமார் பள்ளியை இடித்தவர்களை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை.
அவரது வீட்டை முற்றுகையிட போகும் காங்கிரசார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் இன்று அவரது வீட்டை முற்றுகையிட்டால் நாளை காலை நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தை நாங்கள் முற்றுகையிடுவோம். அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை ஜாதி ரீதியாக பிரித்து ஒடுக்க மாநில அரசு, மத்திய அரசுகள் இணைந்து சதி செய்கின்றன. அந்த சூழ்ச்சிக்கு கட்சிகள் இரையாக கூடாது என்றனர்.












Click it and Unblock the Notifications