மகன்கள் தொல்லை.. திருப்பதி கோவிலுக்கு ரூ.40 லட்சம் சொத்தை எழுதி வைக்க விரும்பும் முதியவர்

சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி அடுத்த சதாகுப்பத்தை சேர்ந்தவர் குருவப்பநாயுடு(80), விவசாயி. மனைவி கமலம்மாள்(70). இவர்களுக்கு கிருஷ்ணய்யா, பாஸ்கர் என்ற 2 மகன்களும், ஆனந்தம்மா என்ற ஒரு மகளும் உள்ளனர். கிருஷ்ணய்யா அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக உள்ளார். பாஸ்கர் விவசாயம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் குருவப்பநாயுடுக்கு அதே ஊரில் 3.89 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.40 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று தெரிகிறது. அவரது சொத்துகளை அபகரிக்க அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அடித்து துன்புறுத்துவதாக குருவப்பநாயுடு குற்றச்சாட்டி வந்தார்.
மகன்களால் தனக்கு ஏற்படும் கொடுமை குறித்து பங்காருபாளையம் காவல் நிலையத்தில் குருவப்பநாயுடு பலமுறை புகார் கொடுத்துள்ளார். ஆனால் புகாரை வாங்கிய காவல்துறை அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் குருவப்பநாயுடு தனது சொத்துகளை திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்து விட்டு, மீதமுள்ள வாழ்கையை திருப்பதியில் கழிக்க வந்துள்ளேன் என்று கூறி திருப்பதி திருமலை தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்ட தேவஸ்தான அதிகாரிகள், அவரை திருப்பதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தங்க வைத்துள்ளனர்.
இது குறித்து தேஸ்தான அதிகாரிகள் கூறியதாவது,
குருவப்பநாயுடுவை ஒரு முதியோர் இல்லத்தில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளோம். இது குறித்து அவரது மகன்களை வரவழைத்து, மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளோம். குருவப்பநாயுடு, மகன்களுடன் செல்ல விரும்பினால் அனுப்பி வைப்போம். இல்லையெனில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.












Click it and Unblock the Notifications