போதையில் ரகளைகள்- சாலை மறியல்: செய்வதறியாமல் திகைத்த போலீசார்!
சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட 6 சட்ட கல்லூரி மாணவர்களை அடக்க முடியாமல் போலீசார் திணறினர். அதேபோல தர்மபுரியில் குடித்துவிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட கும்பலை சமாதானம் செய்வதற்குள் போலீசாருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
சேலம் சட்ட கல்லூரியை சேர்ந்த 6 மாணவர்கள் நேற்று மாலை சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையின் பாரில் மது அருந்தினர். அப்போது அங்கு சுண்டல் வாங்கி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்க முடியாது என்று மாணவர்கள் தகராறில் ஈடுபட்டனர். மேலும் பாரில் இருந்த கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.
அதன்பிறகு அங்கிருந்து வெளியேறிய 6 பேரும், வி.எஸ்.ஏ. வணிக வளாகம் அருகில் உள்ள ஷேர் ஆட்டோ ஸ்டேண்டுக்கு சென்றனர். அங்கு பயணிகள் ஆட்டோவில் 6 பேரும் ஏற முயன்றனர். அப்போது ஆட்டோவில் இருந்த 2 பெண்கள், போதையில் தள்ளாடிய மாணவர்கள் ஆட்டோவில் ஏற எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஆட்டோ டிரைவரும், பெண்களுக்கு சாதகமாக பேசியுள்ளார். இதையடுத்து ஆட்டோ டிரைவருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர்.
தகராறில் ஈடுபட்ட ஆட்டோ உரிமையாளர் மற்றும் மாணவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், ஆட்டோ டிரைவருக்கு சாதகமாக பேசுவதாக கூறிய மாணவர்கள், எஸ்.ஐ.யிடம் வாக்குவாதம் செய்தனர். கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட ஆட்டோ டிரைவர் அங்கிருந்து ஆட்டோவுடன் 'எஸ்கேப்' ஆகிவிட்டார்.
போதையில் இருந்த மாணவர்களிடம் இருந்து தப்பி முயன்ற போலீசார், அமைதியாக காவல் நிலையத்திற்கு சென்றுவிட்டனர். ஆனால் போதை மாணவர்கள், அவர்களை பின்தொடர்ந்து சென்று காவல் நிலையத்திலும் வாக்குவாதத்தை தொடர்ந்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த உதவி கமிஷனர் சந்திரசேகரன், போதை மாணவர்களை ஒரு வழியாக சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
'குடி'மகன்களின் சாலை மறியல்:
இதேபோல மற்றோரு சம்பவம் தர்மபுரி மாவடத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பார் வசதி இருப்பதில்லை. இதனால் டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்கும் குடிமகன்கள், பக்கத்து கடைகளில் சைடு டிஷ் வாங்கி கொண்டு குடிப்பது வழக்கம்.
தர்மபுரி மாவட்டத்தில் குடிமகன்கள் சாலைகளில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடம் இருந்து தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ராகர்க்கிற்கு அதிகளவில் புகார்கள் வந்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளின் அருகே உள்ள பெட்டிக் கடைகளை போலீசார் கண்காணிக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தின் அருகே ஒரு டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. அதன் அருகில் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான கடையில் மது அருந்த தேவையான வாட்டர் பாக்கெட், டம்ளர், முறுக்கு போன்றவை விற்கப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், ராதாகிருஷ்ணனின் பெட்டி கடையில் குடிமகன்களுக்கான பொருட்களை விற்க கூடாது என்று அவரது தம்பி சுரேஷை அழைத்து கண்டித்துள்ளனர். மேலும் அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
அதை அறிந்த சுரேஷின் உறவினர் நேற்று மாலையில் பாப்பிரெட்டிப்பட்டி-சேலம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த குடிமகன்களும் மறியலில் சேர்ந்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் மாறன் அங்கு வந்த போது, மறியலில் ஈடுபட்டவர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்.
இதில் அதிர்ச்சி அடைந்த தாசில்தார், அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். மறியல் தொடர்ந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகளும் மறியலில் இணைந்து கொண்டனர். வேறு வழியில்லாமல் அரூர் டி.எஸ்.பி சம்பத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவாக குடிமகன்களுக்கான சைடு டிஷ்களை பெட்டி கடைகளில் விற்பனை செய்ய போலீசார் அனுமதி அளித்த பிறகு தான், மறியலில் ஈடுபட்டவர்கள் கலந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications