கே.என்.நேரு தம்பியின் நவீன அரிசி ஆலை இடிப்பு: போலீஸ்- திமுகவினர் மோதல்
திருச்சி : லால்குடி அருகே திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு குடும்பத்தாருக்கு சொந்தமான நவீன அரிசி ஆலையை அதிகாரிகள் இடிக்க முன்யறாதல், அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
திருச்சி, லால்குடி அருகே உள்ள வாளுரில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி மணிவண்ணனுக்கு, சுமார் 5 ஏக்கர் அளவில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அரிசி ஆலை உள்ளது.
இந்த நிலையில் நேரு குடும்பத்தினர் தரப்பில் 1200 சதுரஅடி நிலத்தை அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாக தங்கள் வசம் இருந்த பட்டா நிலத்தில் இருந்து 1200 ச.அடி நிலத்தை பரிவர்த்தனை செய்து கொண்டதாகவும், அந்த கோப்பு ஒப்புதலுக்காக சென்னையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், அரிசி ஆலையின் சில பகுதிகள் அரசுப் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இதையடுத்து லால்குடி வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன் மற்றும் வட்டாட்சியர் பாலதண்டாயுதம் மற்றும் அதிகாரிகள் அந்த ஆலையில் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இடத்தை ஹிடாச்சி இயந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர். இதில் முதல் கட்டமாக அரிசி ஆலையின் முன்பகுதியில் இருந்த சிமெண்ட் கூரை, சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு காம்பவுண்ட் சுவர், ஆக்கிரமிக்கப்பட்ட சில கட்டிடங்கள் போன்றவை இடிக்கப்பட்டன.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவி்த்து, அரிசி ஆலையின் நிர்வாகி மணிவண்ணன் மற்றும் அவருடன் திமுக வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஓம்பிரகாஷ் மற்றும் பலர் திரண்டு வந்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கே.என். நேருவின் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், போலீசார் லேசான லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தால் திருச்சி மாவட்டம் முழுக்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications