சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு தடை விதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்
டெல்லி: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிப்பது என்ற அரசின் கொள்கை முடிவுக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக மறுத்துள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி கொடுத்தது. இதனாலேயே ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அரசிலிருந்து வெளியேறி சிறுபான்மை அரசானது.இந்த நிலையில் வழக்கறிஞர் சர்மா என்பவர் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.
இம்மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் லோதா, ஏ.ஆர்.தவே ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு வழங்கப்பட்ட அனுமதிக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
பெமாவில் திருத்தம்
ஆனால் இதனை அமல்படுத்தும் முன்பு அன்னிய செலாவணி நிர்வாக கட்டுப்பாடு சட்டமான பெமாவில் ரிசர்வ் வங்கி உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய அரசு அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பே இந்த சட்ட திருத்தம் அமல்படுத்தியிருக்க வேண்டும்.. இருப்பினும் இனி இத்திருத்தம் கொண்டுவந்தால் சட்ட சிக்கலை சரி செய்துவிடலாம் என்றனர் நீதிபதிகள்.
இந்த வழக்கு விசாரணை நவம்பர் 5-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications