முன்னாள் திமுக அமைச்சர்கள் பெரியகருப்பன், தென்னவன் மீது வழக்கு

காரைக்குடி நகராட்சி ஆணையாளர் மாரியப்பன் அந்த நகர போலீசில் கொடுத்துள்ள புகாரில்,
சில வாரங்களுக்கு முன் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் காரைக்குடி வந்தார். அப்போது பிளக்ஸ் போர்டு வைப்பதற்காக காரைக்குடி நகராட்சியில் 7 இடங்களில் திமுக சார்பில் அனுமதி வாங்கப்பட்டது. ஆனால் 40 இடங்களில் திமுகவினர் பிளக்ஸ் போர்டு மற்றும் தட்டி போர்டுகள் வைத்தனர்.
அதே போல சில தினங்களுக்கு முன்பு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் காரைக்குடிக்கு வந்தார். அப்போதும் அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் எல்லாம் திமுகவினர் பிளக்ஸ் போர்டுகளை வைத்தனர்.
இவற்றை அகற்ற காரைக்குடி நகர அமைப்பு அதிகாரி மாலதி முயன்றார். அப்போது திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.ஆர். பெரியகருப்பன், தென்னவன், சிவகங்கை மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் முரளி மற்றும் திமுகவினர் நகர அமைப்பு அதிகாரி மாலதியை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர்.
எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தனது மனுவில் அவர் கூறியுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வி, முன்னாள் அமைச்சர்கள் கே.ஆர். பெரியகருப்பன், தென்னவன், சிவகங்கை மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் முரளி மற்றும் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications