ஷூவிற்குள் வைத்து ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற 2 பேர் கைது
சென்னை: ஷூவிற்குள் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை மறைத்து வைத்து, மலேசியாவுக்கு கடத்த முயன்ற 2 பேர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு செல்ல இருந்த விமானத்தில் செல்ல வந்த பயணிகளை, சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் செல்ல வந்த ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த ஷாஜகான்(32) மற்றும் சென்னை மண்ணடியை சேர்ந்த காஜாமொய்தீன்(31) ஆகியோர் வந்தனர்.
அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர்களை பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த உடமைகளை சோதனையிட்டனர். ஆனால் அதில் எந்த சர்ச்சைக்குரிய பொருளும் சிக்கவில்லை. இந்த நிலையில் இருவரும் அணிந்திருந்த காலணி(ஷூ) சற்று உயரமாக இருந்ததால், அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவர்களின் காலணிகளை சோதனையிட்டனர். அப்போது ஒன்றரை கிலோ எடையுள்ள மெத்கோ கியுனா என்ற புதிய வகை போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது. இதையடுத்து 2 பேரையும், சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications