ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்- தமிழக அரசு அதிரடி!
சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில பதவிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மேலாண்மை இயக்குனராகவும் தலைவராகவும் உள்ள எம்.டி.நசிமுதீன், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளராக உள்ள ஜி.ஏ.ராஜ்குமாருக்கு பதிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை செயலாளராகவும் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளராகவும் இருந்த ஜி.ஏ.ராஜ்குமார், தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவன மேலாண்மை இயக்குனராகவும், தலைவராகவும் கூடுதல் பொறுப்பு வகிக்கும் கா.பாலசந்திரனுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறையில் இணை செயலாளராக உள்ள டாக்டர்.பி.முத்துவீரன், கைத்தறி மற்றும் நெசவுத்துறை இயக்குனராக உள்ள வி.பழனிகுமாருக்கு பதிலாக மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல பழனிக்குமார், அண்ணா மேலாண்மை கழக இயக்குனராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் டாக்டர்.இறையன்புக்கு பதிலாக அதன் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். பழனிகுமார், பயிற்சியகத்தில் டைரக்டர் ஜெனரலாகவும் பணியாற்றுவார்.
தமிழக தொழில் வெடிமருந்து நிறுவன மேலாண்மை இயக்குனர் பதவி கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன் தலைவராக பணியாற்றும் ஜி.ஏ.ராஜ்குமார் தலைமைச் செயலாளர் அந்தஸ்து பொறுப்பில் பணியாற்றுவார் இதேபோல அண்ணா மேலாண்மை கழக இயக்குனர் பதவி சமூகநல இயக்குநர் பதவிக்கு சமமாக கருதப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications