துரை தயாநிதிக்கு எதிரான பிடிவாரண்ட்டுக்குத் தடை - கோர்ட்டில் சரணடையவில்லை

மதுரை மேலூர் சுற்று வட்டாரத்தில் நடந்த மிகப் பெரிய கிரானைட் மோசடி விவகாரத்தில் துரை தயாநிதியும் சேர்க்கப்பட்டுள்ளார். இவரது ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனமும் மோசடி செய்ததாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் துரை தயாநிதியைப் பிடிக்க மதுரை போலீஸார் பல்வேறு வழியிலும் முயன்று வருகின்றனர். ஆனால் இதுவரை துரை தயாநிதி சிக்கவில்லை. தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் துரை தயாநிதி தலைமறைவாக இருந்து வருவது குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ஏன் என்று தெரியவில்லை என்று பதிலளித்திருந்தார். மேலும், துரை தயாநிதி தலைமறைவாக இருந்து வருவதை கருணாநிதி விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், துரை தயாநிதி செங்கோட்டை கோர்ட்டில் சரணடையப் போவதாக திடீரென இன்று செய்தி பரவியது. இதையடுத்து கோர்ட்டில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். துரை தயாநிதி சரணைடய வந்தால் அவரை தடுத்து கைது செய்ய போலீஸார் தீவிரமாக இருந்தனர். ஆனால் பிறகு, வேறு ஒரு நெல்லை கோர்ட்டில்தான் தயாநிதி சரணடையவிருப்பதாக புதிய தகவல் வெளியானது.
இதையடுத்து தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் நெல்லை மாவட்ட நீதிமன்றங்களில் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.
இருப்பினும் அவர் இன்று சரணடைய வாய்ப்பில்லை. துரை தயாநிதியை கைது செய்ய மேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி துரை தயாநிதி சார்பில் நேற்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், நான் ஏற்கனவே என் மீதான வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தேன். அது தள்ளுபடி செய்யப்பட்டது. என் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். அந்த மனு நிலுவையில் உள்ளது. பின்னர் மீண்டும் நான் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளேன்.
நான் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் பிடிவாரண்டு பிறப்பிக்க முடியாது. எனவே என் மீதான பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது துரை தயாநிதியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை மற்றொரு கோர்ட்டில் நடந்து வருவதால் இந்த மனு மீதான விசாரணையையும் அந்த கோர்ட்டுக்கு மாற்றம் செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
துரை தயாநிதியின் முன்ஜாமீன் தொடர்பான மனு மீதா ன விசாரணை நீதிபதி மதிவாணன் முன்னிலையில் நடந்து வருகிறது. எனவே பிடி வாரண்டை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணை அந்த கோர்ட்டில் இன்று நடைபெற்றது.
இன்று நீதிபதி மதிவாணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் முன் ஜாமின் மனுவும், வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவும் நிலுவையில் இருக்கும்போது கீழ் நீதிமன்றம் இந்த பிடிவாரண்ட் பிறப்பித்ததில் உள்நோக்கம் இருக்கிறது.
எனவே இதை ரத்து செய்யவேண்டும் என்ற மூத்த வழக்கறிஞர் கோபிநாத் ஆஜராகி வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை வரும் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும் கைது பிடிவாரண்டுக்கு இடைக்காலத் தடையும் விதித்தார்.












Click it and Unblock the Notifications