அப்பாடா, ஒரு வழியாக தொடங்கியது வட கிழக்குப் பருவ மழை!
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து நல்ல மழையை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். பருவ மழையின் தொடக்கமாக தற்போது தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று மாலை முதல் செம மழை
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக சென்னையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை முதல் பெய்து வரும் தொடர் மழையால் நகரமே வெள்ளக்காடாகியுள்ளது.

இது பருவ மழைதான்.. அறிவித்தது வானிலை மையம்
முன்னதாக நேற்று வட கிழக்குப் பருவ மழைக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி விட்டன. இதை உறுதிப்படுத்தும் வகையில் தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது என்று கூறியிருந்த வானிலை ஆய்வு மையம் இன்று, வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில்..!
தமிழகத்தையொட்டிய வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், அதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் வியாழக்கிழமை நல்ல மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்ய உள்ளது. சென்னையில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் மழை
தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஸ்தம்பித்தது
சென்னையில் நேற்றிலிருந்து பெய்து வரும் மழையால் நகரின் இயல்பு வாழ்க்கை பல இடங்களில் பாதிக்கப்பட்டது. விட்டு விட்டு மழை பெய்து வருவதால் தட்பவெப்ப நிலை அடியோடு மாறி நகரமே குளுகுளுவென்று மாறியுள்ளது. நகரின் பல பகுதிளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
அம்பத்தூர் தொழிற் பேட்டையில் நூற்றுக்கும் அதிகமான தொழிற்சாலைகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பச்சையப்பன் கல்லூரி எதிரே நியூ ஆவடி ரோட்டில் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வடியாமல் உள்ளது. இன்றும் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்வதால் ரோடுகளில் மழை நீர் தேங்கி கிடக்கிறது.












Click it and Unblock the Notifications