நித்தியானந்தாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஜெகதலபிரதாபன் மற்றும் கெளதமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில்தான் நித்தியானந்தா நடத்தை கெட்டவர் என்று தமிழக அரசு சர்ட்டிபிகேட் கொடுத்தது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு விவாதங்களும் இன்றுடன் முடிவடைந்தன. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதீனத்தை ஒப்படைக்கும் வழக்கை ஐகோர்ட்டுக்கு மாற்ற அருணகிரிநாதர் மனு
இதற்கிடையே மதுரை ஆதீன மடத்தை அரசிடம் ஒப்படைக்கக் கோரும் வழக்கில் அருணகிரிநாதர் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
மதுரை ஆதீன மடத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் இந்து அறநிலையத்துறையின் அனுமதி பெறாமலேயே விதிகளை மீறி ஆதீன மடத்தின் சொத்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. அத்துடன் நித்தியானநதாவை இளைய ஆதீனமாகவும் அருணகிரிநாதர் நியமித்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதில் தமிழக அரசு கடும் அதிருப்தி அடைந்ததுடன் நித்தியானநதா ஒரு நடத்தை கெட்ட ஆள் என்று நீதிமன்றத்திலேயே சொல்லி சந்தி சிரிக்கவும் வைத்தது. இந்த நிலையில் மதுரை ஆதீன மடத்தை அரசிடம் ஒப்படைக்கக் கோரி அதிரடியாக இந்து அறநிலையத்துறை சார்பில் நேற்று ஒரு மனு மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அறநிலையத்துறை தாக்கல் செய்திருந்த மனுவில் சொல்லப்பட்டது என்ன?
மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபால், மதுரை ஆதீனத்தின் மடாபதிபதியாக அருணகிரிநாதரும் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டதாக கூறப்படும் நித்யானந்தாவும் சேர்ந்து மதுரை ஆதீன சொத்துக்களை நிர்வகிக்க ஒரு அறக்கட்டளையை உருவாக்கினர். ஆதீன சொத்துக்களை விற்பனை செய்வதற்கும் குத்தகைக்கு விடுவதற்கும் முன்பு இந்து அறநிலையத் துறையிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். ஆனால் மதுரை ஆதீனமாக அருணகிரிநாதர் இருக்கும்போதே பல ஆண்டுகளாக இந்து அறநிலையத் துறையிடம் அனுமதி பெறாமலேயே ஏராளமான சொத்துக்களை விற்பனை செய்துள்ளார்.
1995ம் ஆண்டில் 7.3 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு விற்றுள்ளார். 1999ம் ஆண்டில் ஆதீனத்திற்கு சொந்தமான மேலும் ஒரு சொத்தை விற்றுள்ளார். அரசு விதிகளுக்கு முரணாக செயல்பட்டதன் மூலம் மடாதிபதியாக இருக்க அருண கிரிநாதர் தகுதி அற்றவர். அவர் இளைய மடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்ததும் சட்டத்திற்கு புறம்பான செயல். கடந்த 10 ஆண்டுகளாக ஆதீன மடம் சார்பில் மீனாட்சி கோயிலில் நடக்கும் பூஜைகள் நடக்கவில்லை.
சுயவிளம்பரத்திற்காகவும் ஆதீன மடத்தின் வருவாயை அருணகிரிநாதர் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையின் பதிவை செல்லாது என அறிவிக்க வேண்டும். ஆதீன மடத்தை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆதீனத்துக்கு கடும் எதிர்ப்பு
இந்த மனு நீதிபதி குருவையா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் ஆவணங்களைப் படித்துப் பார்க்க ஆதீனம் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. ஆனால் அரசுத் தரப்பு இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும் தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் ஆவணங்கள் அனைத்துமே ஆதீனத்தால் தாக்கல் செய்யப்பட்டவைதான் என்றும் பதிலடி கொடுத்தது. இதனால் இன்னொரு அஸ்திரத்தை கையிலெடுத்தது ஆதீனம் தரப்பு. ஆதீன மடம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலும் நடைபெறுவதால் அமர்வு நீதிமன்றத்தில் இருந்து வழக்கை மாற்றக் கோரி ஒரு மனுத்தாக்கல் செய்யபட்டது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்டு ஆதீனம் மனு மீது பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications