செளதி அரேபியாவில் தமிழர் மர்மச் சாவு- உடலை மீட்டு தர தாய் கோரிக்கை
கடலூர்: சவுதி அரேபியாவில் மர்மமான முறையில் இறந்த கடலூரை சேர்ந்த வாலிபரின் உடலை மீட்டு தருமாறு, அவரது தாயார் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த சிங்காரகுப்பம் கிராமத்தில் வசிப்பவர் அம்பிம்கைதாசன். இவரது மகன் சுந்தர்ராஜன்(26). கடந்த மாதம் 25ம் தேதி கத்தார் நாட்டிற்கு ஓட்டுநர் வேலைக்காக சென்றார். அங்கு 4 நாட்கள் தங்க வைக்கப்பட்ட அவர், அதன்பிறகு சவுதி அரேபியாவுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சவுதி அரேபியாவில் இருந்து கடந்த 13ம் தேதி கடலூரில் உள்ள தனது பெற்றோருக்கு, சுந்தர்ராஜன் போன் செய்து பேசினார். அப்போது அவர், சவுதிஅரேபியாவில் உள்ள பாலைவனத்தில் தான் ஒட்டகம் மேய்த்து வருவதாகவும், தான் மேய்த்த ஒட்டகக்குட்டி இயற்கையாகவே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் தனக்கு அங்கு உணவு அளிக்காமல் கஷ்டப்படுத்துவதால், அங்கு இருக்க பயமாக இருப்பதால் விரைவில் இந்தியாவிற்கு அழைத்து செல்லுமாறும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் போன் செய்த அடுத்த நாளே, சுந்தர்ராஜன் வேலை செய்த இடத்தில் இருந்து, அவர் இறந்துவி்ட்டதாக போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
எனவே வெளிநாட்டிற்கு சென்று மர்மமான முறையில் இறந்த தனது மகனின் முகத்தை கடைசியாக பார்க்கும் வகையில், அவரது உடலை மீட்டு தர வேண்டும் என்று அவரது தாய் விஜயலட்சுமி, கடலூர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். விஜயலட்சுமியின் மனுவை பெற்று கொண்ட கலெக்டர் உடனடியாக அதன்மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications