சன் டிவி புதிய ஐபிஎல் அணி வாங்கியதில் மெகா ஊழல்: சொல்கிறார் லலித் மோடி

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி, வீரர்களுக்கு சம்பளம் அளிக்க முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது. இதனால் பிசிசிஐயின் விதிமுறைகளை மீறியதாக கூறி, அந்த அணி ஐபிஎல் குழுவில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நிலையில் ஹைதராபாத் நகரை அடிப்படையாக கொண்ட புதிய ஐபிஎல் அணியின் ஏலம் நேற்று மும்பையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு சன் டிவி குழுமம், ஆண்டிற்கு 85.05 கோடி மதிப்பில் புதிய அணியின் உரிமையை வாங்கியது. இந்த நிலையில் முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி புதிய குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பி உள்ளார்.
இது குறித்து லலித் மோடி, டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
இந்திய கிரிக்கெட் வாரியத்தின்(பிசிசிஐ) தலைவர் சீனிவாசனின் நட்பு நிறுவனமான சன் டிவி குழுமத்திற்கு, புதிய ஐபிஎல் அணியின் உரிமை அன்பளிப்பாக அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக சன் டிவி குழுமம் புதிய ஐபிஎல் அணியை வாங்கலாம் என்ற நான் நினைத்தேன். அதை விரும்பிய சீனிவாசனின் ஆசை தற்போது நிறைவேறி உள்ளது. இதைவிட ஒரு பெரிய ஊழலை எங்கும் பார்க்க முடியாது.
சீனிவாசனின் நண்பருக்கு பிசிசிஐ ஒரு ஐபிஎல் அணியை அன்பளிப்பாக அளித்துள்ளது. ஒரு ஐபிஎல் அணியை வாங்க சகாரா 370 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்தது. ஆனால் சன் டிவி குழுமத்திற்கு இவ்வளவு குறைந்த விலைக்கு அணி கிடைத்துள்ளது. அது எப்படி, ஏன்?
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நிச்சயமாக இந்தியன் சிமெண்ட்ஸின் கீழ் தான் நடைபெறும். இதற்கான முயற்சியில் இந்தியன் சிமெண்ட்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இது குறித்து தெரிந்து கொள்ள சன் டிவி குழுமம் மற்றும் இந்தியன் சிமெண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான பொதுவான பங்குத்தாரர்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும். இரு நிறுவனங்களுக்கும் நிச்சயம் பொதுவான பங்குத்தாரர்கள் இருப்பார்கள் என்று டுவிட்டரில் லலித் மோடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications