கிரானைட் கொள்ளை- தலைமறைவாக இருந்த குவாரி உரிமையாளர் சரண்!
மதுரை: தமிழகத்தை உலுக்கிய பல ஆயிரம் கோடி கிரானைட் கொள்ளை வழக்கில் 2 மாதங்களாக தலைமறைவாக ஆர்.ஆர். கிரானைட் அதிபர் ராஜசேகரன் இன்று திடீரென சரணடைந்துள்ளார். மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்டோர் தொடர்ந்தும் தலைமறைவாக இருக்கின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்தது என்பது புகார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி உட்பட 40க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பழனிச்சாமி உள்ளிட்ட சிலர் சிறையில் இருக்கின்றனர்.
அழகிரியின் மகன் துரை தயாநிதியின் இருப்பிடம் எங்கே என்று தெரியவில்லை. அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மேலூர் பகுதியில் உள்ள கீழவளவில் கிரானைட் கற்களை அளவுக்கு அதிகமாக வெட்டி எடுத்ததாக ஆர்.ஆர். கிரானைட் அதிபர் ராஜசேகரன் மீது கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். தனிப்படை போலீசாரும் அவரை தேடி வந்தனர். 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த கிரானைட் அதிபர் ராஜசேகரன் இன்று காலை திடீரென மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரண் அடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவரிடம் கூடுதல் சூப்பிரண்டு மயில்வானன், தனிப்படை டி.எஸ்.பி. தங்கவேல் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications