பிச்சை எடுத்த பேச முடியாத வாலிபருக்கு சொந்தம் கொண்டாடிய இரு வீட்டார்
கிருஷ்ணகிரி: சூளகிரி பஸ் நிலையம் அருகே பிச்சை எடுத்து கொண்டிருந்த வாலிபர், 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மற்றொரு குடும்பத்தை சேர்ந்தவரை போல இருந்ததால், இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. முடிவில் போலீசார் வந்து பிச்சை எடுத்து வந்த வாய் பேச முடியாத வாலிபரை காப்பாற்றி, உண்மையான பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்தவர் சாப்ஜான். இவர் பிளாஸ்டிக் மற்றும் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மொத்தம் 4 மகள்கள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இதில் அல்லாப் பகாஷ் என்பவர், பிறவியிலேயே கால் ஊனமுற்று நடக்க முடியாதவர். மேலும் அவரால் வாய் பேச முடியாது. குடும்ப வறுமை காரணமாக பகாஷ், சூளகிரி பஸ் நிலையம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் பிச்சை எடுப்பது வழக்கம்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி கிராமத்தை சேர்ந்தவர் தங்கம்(70). கடந்த சில ஆண்டுகளுக்கு இவரது கணவர் பழனி இறந்துவிட்டார். மேலும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அவரது மகன் ராஜா என்பவர் காணாமல் போய்விட்டார். காணாமல் போன ராஜாவை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தங்கத்தின் உறவினர்கள் சிலர், சூளகிரி பஸ் நிலையம் வழியாக ஓசூர் சென்றனர். அப்போது சூளகிரி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து கொண்டிருந்த பகாஷை கண்டனர். அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ராஜாவை போலவே இருந்ததால், தங்கத்தின் உறவினர் இடையே குழப்பம் ஏற்பட்டது.
தங்கத்தின் வீட்டிற்கு வந்த உறவினர் காணாமல் போன ராஜாவை, சூளகிரி பஸ் நிலையத்தில் பார்த்ததாக கூறினர். இதையடுத்து தங்கத்தின் குடும்பத்தினர் ராஜாவை அழைத்து செல்லும் திட்டத்துடன் சூளகிரி பஸ் நிலையத்திற்கு காரில் வந்தனர்.
இது குறித்து வாய் பேச முடியாத பகாஷிடம் விசாரித்தனர். ஆனால் அவரால் பேச முடியாததால், பகாஷை கட்டாயமாக பிடித்து காரில் ஏற்று செல்ல முயன்றனர். அதை கண்டு அப்பகுதியினர் தடுத்து, பகாஷின் வீட்டாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்ததால், இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.
அதற்குள் இது குறித்து தகவல் அறிந்த போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து, இரு குடும்பத்தினரிடமும் விசாரித்தனர். இதில் இருவரும் பகாஷ், தங்களின் மகன் என்று உரிமை கொண்டாடினர். மேலும் 8 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ராஜாவின் பழைய போட்டோக்களை காட்டி, தங்கத்தின் குடும்பத்தினர் அழுதனர்.
கடைசியாக மாற்றுத்திறனாளியான வாலிபரிடம், போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் சைகை மூலம் சாப்ஜான் தான் தனது தந்தை என்று கூறினார். இதனால் இறுதியாக விடாபிடியாக நின்ற, தங்கத்தின் உறவினர்களிடம் இனி ராஜா என்ற பெயரில் பகாஷைவை கடத்தி செல்லமாட்டோம் என்று எழுதி வாங்கி விட்டு அனுப்பி வைத்தனர்.
இரு குடும்பத்தினரும் சொந்த கொண்டாடிய பகாஷை மீட்டு, அவரது உண்மையான பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து வந்த மாற்றுத்திறனாளி வாலிபருக்கு, இரு குடும்பத்தினர் சொந்தம் கொண்டாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications