வேலூரில் விபத்து: மேம்பாலத்தில் அந்தரத்தில் தொங்கிய அரசு பஸ்-40 பயணிகள் உயர் தப்பினர்
வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் சென்னையில் இருந்து வேலூருக்கு சென்ற அரசு மேம்பாலத்தில் மோதி, அந்தரத்தில் தொங்கியது. 30 அடி பள்ளத்தில் பஸ் விழாமல் இருந்ததால், பஸ்சில் இருந்த 40 பயணிகள் உயிர் தப்பினர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த அரசு பஸ் ஒன்று நேற்று சென்னையில் இருந்து வேலூருக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சை ஆற்காட்டை சேர்ந்த ரவி(34) என்பவர் ஓட்டினார். வேலூரை சேர்ந்த அன்பு நடத்துநராக செயல்பட்டார். பஸ்சில் 40 பயணிகள் பயணித்தனர்.
நேற்று காலையில் 11.40 மணி அளவில் பஸ் வேலூர் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே உள்ள 40 அடி உயரம் கொண்ட மேம்பாலத்தின் சென்று கொண்டிருந்தது. அப்போது கனமழை பெய்து கொண்டிருந்தது. இந்த நிலையில் பஸ்சின் முன் சென்று கொண்டிருந்த மோட்டர் சைக்கிளின் மீது மோதாமல் இருக்க, பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதில் பஸ்சின் மேற்கூரையின் மேல் வைக்கப்பட்டிருந்த மாற்று டயர்(ஸ்டெப்னி) பஸ்சின் முன்பகுதியில் வந்து விழுந்தது.
டயர் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திடீரென திருப்பிய போது ஸ்டேரிங் உடைந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மேம்பாலத்தின் சாலை தடுப்பை உடைத்து கொண்டு வலதுபுறம் சென்றது. அங்கு மேம்பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு அந்தரத்தில் தொங்கியது.
ஆனால் மேம்பாலத்தில் இருந்து பஸ் கீழே விழவில்லை. இருப்பினும் பஸ்சில் முன்பக்க சீட்களில் அமர்ந்திருந்த 8 பேர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தனர். அவர்கள் மேம்பாலத்தின் அருகே இருந்த மரங்களின் கிளைகள் மீது விழுந்தால், லேசான காயத்துடன் உயர் தப்பினர்.
பஸ்சில் இருந்து கீழே விழுந்த மாற்று டயர் மோதியதில் மோட்டர் சைக்கிளில் வந்த சேண்பாக்கத்தை சேர்ந்த பிரதீப்ராஜ்(15) படுகாயமடைந்தார். அவருடன் வந்த நண்பர் மாணிக்கம்(20) லேசான காயமடைந்தார். அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் தலைமறைவாகிவிட்டார்.
விபத்திற்கு பிறகு பஸ்ஸில் இருந்த பயணிகள் ஜன்னல் வழியாக வெளியே குதித்தனர். சிலர் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து கொண்டு கீழே குதித்தனர். விபத்தில் காயமடைந்த வேலூரை சேர்ந்த முருகன், மணி, சுந்தர் உட்பட 10 பேர், வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்தால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கிரைன் மூலம் பாலத்தில் தொங்கிய பஸ் அப்புறப்படுத்தப்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் சங்கர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தார். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications