சவுதியில் கொத்தடிமைகளாக இருந்த 2 தமிழர்களை மீட்ட மனிதம் அமைப்பு!

சவுதி அரேபியாவில் கொத்தடிமைகளாக உள்ள 2 தமிழர்களை மீட்க உதவுங்கள் என்ற கோரிக்கையோடு ஒரு மின்னஞ்சல், மனிதம் மின்னஞ்சலுக்கு விஜயகுமார் என்பவர் மூலம் கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி கிடைத்துள்ளது.
முனியசாமி(47) மற்றும் ஜபகர் அலி (46) ஆகியோர் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தையும், நாகை மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். இருவரும் சவுதி அரேபியாவில் கட்டிட கம்பி கட்டும் வேலையை தேடி வந்தனர். திருச்சியில் உள்ள ஒரு டிராவல்ஸில் துணை முகவராக பணியாற்றும் ஒருவர் மூலம் வேலைக்கு பல லட்சம் பணம் கொடுத்துள்ளார் முனியசாமி. அவர் பணம் கொடுத்த அதே டிராவல்ஸில்(சபியா டிராவல்ஸ்) ஜபகர் அலியும் லட்சக்கணக்கான பணத்தைக் கட்டி வேலை கேட்டிருந்தார். அவர்கள் கடந்த ஜனவரி மாதம் சவுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சவுதிக்கு சென்றவுடன் ஒரு அரபி முதலாளிக்கு போன் செய்தால் அவர் வந்து அழைத்துச் சென்று வேலை வழங்குவார் என்று சொல்லப்பட்டது. அது போன்றே ஒரு அரபி முதலாளி அவர்கள் இருவரையும் சவுதியின் தலைநகரான ரியாத்திலிருந்து சுமார் 800 கி.மீ. தாண்டி, கிட்டத்தட்ட 50 கி.மீ. சுற்றிலும் ஆள் நடமாட்டமில்லாத பாலைவன பகுதியில் ஒரு ஒட்டக பண்ணையில் வேலைக்கு அமர்த்தினார்.
தாங்கள் இருவரும் இந்த வேலைக்கு வரவில்லை, மாறாக கட்டிடத்தில் கம்பி கட்டும் வேலைக்கு வந்துள்ளதாகவும், அந்த வேலையை கொடுக்க வேண்டும் என்றும் கோரி, ஒட்டகம் மேய்க்க மறுத்தனர். இதைக் கேட்டதும், ஒட்டக பண்ணையின் உரிமையாளரும், அவரின் வங்கதேசத்து பணியாட்களும் அந்த இருவரையும் பிரம்பால் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
அந்த டிராவல்ஸுக்கு தாங்கள் ஒவ்வொருவருக்கும் சவுதி ரியால் 10,000 கொடுத்து விலைக்கு வாங்கி விட்டதாகவும், தங்களின் அந்த பணத்தை கொடுத்தால் மட்டுமே கடவுச் சீட்டையும், விசாவையும் கொடுப்போம் என்று கூறி அடித்து உதைத்துள்ளனர். தட்டிக் கேட்க முடியாத இருவரும் தாங்க முடியாத வெயிலிலும், வெப்பக் காற்றிலும் ஒட்டகத்தை மேய்த்து வந்தனர். அவர்கள் ஒட்டகம் சாப்பிடும் உணவையே சாப்பிட்டும், ஒட்டகம் அருந்து தண்ணீரையே குடித்தும் நாட்களை கழித்தனர்.
இந்த நிலையில் அவர்கள் தமிழகத்திலிருந்து கொண்டு சென்ற கைப்பேசியை பயன்படுத்தி டிராவல்ஸ் பணியாளர்களை தொடர்பு கொண்டபோது, "நீங்கள் ஒரு வருடம் அங்கு தான் வேலை செய்ய வேண்டும்" என மிரட்டப்பட்டனர். இதனால் அவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
தாங்கள் அரபிக்கு கொத்தடிமையாக்கப்பட்டது குறித்து வருத்தப்படுவதை தவிர வேறெதுவும் தெரியாது இரண்டு மாதங்களுக்கு மேல் திகைத்திருந்தனர். குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் அவர்களை காப்பாற்ற வழி தெரியாமல் இருந்தனர்.
இந்நிலையில் தான் முனியசாமியின் குடும்பத்தைச் சேர்ந்த விஜயகுமார் இந்த கொடுமை குறித்து தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மின்னஞ்சல் மூலமும், ஃபேஸ்புக் மூலமும் 2012 மார்ச் மாதம் "சவுதி அரேபியாவில் சிக்குண்ட இரு தமிழர்களை மீட்க உதவுங்கள்", என கோரிக்கையை வைத்திருந்தார். இந்த கோரிக்கை மனிதம் அமைப்பிற்கு கிடைத்தது.
இதனை கொண்டு மனிதம் அமைப்பு அந்த இருவரையும் மீட்க இந்திய அரசின் வெளியுறவுத்துறைக்கும், தமிழக முதல்வருக்கும் இது குறித்த அனைத்து விபரங்களையும் அனுப்பியது. இந்த விபரங்களை பெற்றுக் கொண்டதற்கான அத்தாச்சி கடிதங்கள் ஒரு மாதத்திற்கு பின்பு கிடைத்துள்ளது. ஆனால் பெரியதொரு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கான அறிகுறிகள் இல்லை என்று கூறப்படுகின்றது.
அரசுகளை மட்டும் சார்ந்திராமல், மனிதம் ஊடகங்களின் துணையோடு செய்தியை வெளிக் கொண்டு வந்தது. தொடர்ந்து அவர்களை மீட்டெடுக்க பல்வேறு வழிகளை கையாண்டது. அந்த இருவரும் ஒட்டகம் மேய்க்கும் புகைப்படங்களை வெளிக்கொண்டு வந்தது. அவ்விருவரையும் தொடர்பு கொண்டு நம்பிக்கை அளித்தது.
சில ரகசிய நடவடிக்கைகள் மூலம் அவர்கள் முதலில் ரியாத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரியாத்தில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னையில் உள்ள மனிதம் அமைப்பின் அலுவலகத்திற்கு வந்த அந்த இருவரும் தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.
வெளிநாட்டில் கொத்தடிமைகளாக இருந்த இருவரை மீட்ட மனிதம் அமைப்பின் செயல் இயக்குநர் அக்னி சுப்ரமணியத்திற்கு பாராட்டுகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.












Click it and Unblock the Notifications