அய்யய்யோ என்று விஜயகாந்த் காலில் விழுந்தாரே அமைச்சர், மறந்து போச்சா?.. தேமுதிக கேள்வி

விருகம்பாக்கம் பார்த்தசாரதியை விட்டு கேப்டன் டிவியில் ஒரு பேட்டி கொடுக்க வைத்துள்ளது தேமுதிக. அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது:
கடந்த 20 வருடமாக சட்டமன்றத்தில் கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார்கள். இவர்கள் சட்டமன்றத்திற்கு வந்தது கிடையாது. கடந்த திமுக ஆட்சியில் ஜெயலலிதா கொடநாட்டிலே இருந்துகொண்டு அறிக்கை விடுவார். அவரது கட்சிக்காரர்கள்தான் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சட்டமன்றத்திற்கு விஜயகாந்த் வந்தால்,அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற மரியாதை கொடுக்க தெரிய வேண்டும். அப்படிப்பட்ட மரியாதை கொடுக்க தெரியாதவர்கள்தான் அதிமுக உறுப்பினர்கள்.
விஜயகாந்த்தோ, தேமுதிக உறுப்பினர்களோ சட்டமன்றத்தில் பேசினால், அந்தத்துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் பேச வேண்டும். ஆனால் அதற்கு பதில் சொல்ல அவர்களுக்கு தெரியவில்லை. பதில் சொல்ல தெரியவில்லை என்பதை காட்டிக்கொள்ளாமல் விஜயகாந்த் மீது குறை சொல்லுகிறார்கள்.
சட்டசபையில் முனுசாமி வயதில் மூத்தவர். அவர் நிதானத்தோடு இருக்கிறாரோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் விஜயகாந்த் பற்றி பேசுகிறார். வளர்மதியும் தவறாக பேசுகின்றார். அவர்கள் மட்டும்தான் பேச வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கக் கூடாது. எங்களுக்கும் வரலாறு தெரியும். சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், வீதி வீதியாக பேச முடியும்.
சட்டமன்றத்தில் இப்படி பேசக்கூடியவர்கள் 2011 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது அவரது காலில் யார் யார் விழுந்தார்கள், டெம்போ வேனில் இருந்த நாற்காலியை தொட்டு கும்பிட்டவர்கள் யார் யார் என்று தெரியாதா.
தற்போது மாதவரம் எம்எல்ஏவும், அமைச்சராகவும் இருக்கும் மூர்த்தி, தீவிர பிரச்சாரத்தில் இருந்த விஜயகாந்த் காலில் விழுந்து, அய்யய்யோ நீங்கள் கூட்டணி இல்லையென்று சொன்னவுடன் நான் பிரச்சாரத்தையே ரத்து செய்துவிட்டேன் என்று சொன்னவர். ஆனால் அவர் இன்றைக்கு சட்டமன்றத்திலே எங்களால்தான் தேமுதிகவுக்கு 29 இடங்கள் கிடைத்தது என்று பேசுகிறார்.
உண்மையைச் சொல்லப்போனால் நாங்கள் கூட்டணியை தேடி போகவில்லை. அவர்கள்தான் தேடி வந்தார்கள் தேமுதிகவை.
எத்தனை கொலை, எத்தனைக் கொள்ளை
செங்கல்பட்டு தொகுதி தேமுதிக எம்எல்ஏ அனகை முருகேசனை போலீசார் கைது செய்தனர்.அவர் ஒன்றும் கொலை குற்றவாளி அல்ல. அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் உங்கள் மீது வழக்கு உள்ளது. கைது செய்ய வேண்டும் என்று சொன்னால் அவரே நேரடியாக வந்திருப்பார்.
தமிழகத்தில் எத்தனை கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்கிறது. உதாரணத்திற்கு சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறையைச் சேர்ந்த எஸ்.ஐ. ஆல்வின்சுதன் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட்டீர்களா?
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் திருச்சில் படுகொலை செய்யப்பட்டாரே அந்த குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட்டீர்களா? கடந்த 10 நாள் முன்பு வேலூரில் பாஜக பிரமுகர் அரவிந்த் ரெட்டி கொலை செய்யப்பட்டாரே அந்த குற்றவாளிகளை கண்டுபிடித்தீர்களா?
தென் மாவட்டங்களில் வெடிகுண்டு வீசி உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்றைக்கு ஜெயலலிதா ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளைதான் நடந்துகொண்டிருக்கிறது. காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை சரி செய்ய அவர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.
சட்டமன்றத்திலே என்ன பேசுகிறார்கள். அங்கொன்றும், இங்கொன்றும் நடக்கிறது. இதையெல்லாம் பெரிதுப்படுத்தி பேசவேண்டாம் என்கிறார்கள். கொலை என்பது சாதாரணமாகிவிட்டதா முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு. ஒரு உயிரை உயிராக பார்க்கக் கூடாதா. தமிழகம் முழுவதும் நடந்த நகைக்கொள்ளைகளில், பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேருக்கு தீர்வு ஏற்படுத்தி தந்தீர்கள் என்று கேட்டார் பார்த்தசாரதி.












Click it and Unblock the Notifications