தீபாவளிக்கு ரூ.120 கோடி மது விற்றே ஆக வேண்டும்.. கடைகளை நெருக்கும் டாஸ்மாக்!

மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன, எங்களுக்கு வருவாய்தான் தேவை, பணம் தான் தேவை என்று டாஸ்மாக் மூலம் அரசு வருவாயை, மக்கள் பணத்தை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது ஆண்டுதோறும். வருடத்திற்கு வருடம் டாஸ்மாக் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் அதிகரித்தபடியேதான் உள்ளது. 2011-12ம் ஆண்டு ரூ. 18,000 கோடி வருவாய் கிடைத்தது. 2012-13ல் இது ரூ. 22,000 ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.
இந்த நிலையில் தீபாவளி போன்ற பண்டிகையின்போது பெருமளவில் வருமானம் கிடைக்கும். கடந்த தீபாவளியன்று ரூ. 90 கோடிக்கு மது விற்பனையானது. இந்த ஆண்டு விலை உயர்வு காரணமாக ரூ. 120 கோடிக்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாம் டாஸ்மாக் நிர்வாகம்.
இதை உறுதி செய்யும் வகையில் கடைகள் தோறும் மது வகைகளை குவித்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாம்.மேலும் ஆர்டர்கள் வரும்போது கொடவுன்களிலிருந்து கடைகளுக்கு மது பெட்டிகளைக் கொண்டு செல்ல வாகனங்களையும் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
அத்தோடு நில்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இந்த அளவுக்கு விற்பனை செய்தேயாக வேண்டும் என்று இலக்கு வகுத்துக் கொடுத்துள்ளனராம். கண்டிப்பாக இந்த அளவை எட்ட வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தி கூறி வருகின்றனராம். இதனால் ஒவ்வொரு கடைக்கும் இவ்வளவு விற்றாக வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறதாம்.
இதனால் கடைக்காரர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications