புத்திசாலித்தனமான முடிவால் தீபாவளிக்கு வசூலை அள்ளிய அரசு பஸ்கள்!

எப்போதுமே தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விசேஷ நாட்களின்போது சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட வெளியூர்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக செல்வது வழக்கம். இந்த நாட்களின்போது முன்பெல்லாம் ரயில்களில்தான் மக்கள் பெரும்பாலும் செல்வார்கள். ஆனால் இப்போது ரயில்களை நம்பி இருக்க முடியவில்லை. காரணம், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இப்போது டிக்கெட் புல்லாகி விடுகிறது.
ரயிலை விட்டால் அடுத்து தனியார் பேருந்துகள்தான். இங்கு அதிக கட்டணம் வசூலிப்பதால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். அதிலும் ஆம்னி பஸ்கள் அடிக்கும் பகல் கொள்ளையைப் பற்றி எழுத வேண்டுமானால் தனி வெப்சைட்டே போடலாம். அப்படி ஒரு அடாவடி வசூல் கொள்ளையில் ஆம்னி பஸ்கள் நெருக்கடியான நேரத்தில் ஈடுபடுகின்றன.
வழக்கமாக இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில், அதிக அளவில் அரசு பஸ்களை விட மாட்டார்கள். ஆனால் இந்த தீபாவளிக்கு அப்படியே நிலைமை தலைகீழாக மாறியது.
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து அதிக அளவிலான அரசு பஸ்கள் பல்வேறு ஊர்களுக்கும் இயக்கப்பட்டன. அதுவும் எப்படி தெரியுமா.. கூட்டம் சேர சேர பஸ்கள் வந்து கொண்டே இருந்தன. இதனால் மக்களுக்கு பஸ் கிடைப்பதில் பெரிய அளவில் சிக்கல் ஏற்படவில்லை. வந்து நின்றோமோ, சிறிது நேரத்தில் பஸ்சில் ஏறினோமா என்று சொல்லும் அளவுக்கு படு ஈசியாக இருந்தது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவிலான அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் மக்களுக்கும் பெரும் சவுகரியமாக இருந்தது. அதிக அளவில் பஸ்கள் விடப்பட்டதால் போக்குவரத்துக் கழகங்களுக்கும் கூடுதல் வசூல் கிடைத்துள்ளதாம்.
அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பஸ்களில் நவம்பர் 9,10,11 ஆகிய மூன்று நாள்களில் ஆன வசூல், கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ. 1.5 கோடி கூடுதல் எனத் தெரியவந்துள்ளது.
தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னை உள்பட பல்வேறு ஊர்களிலிருந்து, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என்பதால் 6,859 சிறப்பு பஸ்களை தமிழக அரசு இயக்கியது. இதில் சென்னையிலிருந்து மட்டும் 2,828 சிறப்பு பஸ்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன.
இந்த சிறப்பு பஸ்களில் குறிப்பாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலைமோதியது. இந்த மூன்று நாள்களில் மட்டும் சென்னையிலிருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பல்வேறு ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் பயணிகள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது என்றும், அரசு பஸ்களின் வசூலும் பல கோடியைத் தாண்டியுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பஸ்களில், இந்த மூன்று நாள்களின் வசூலை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ரூ. 1.5 கோடி கூடுதலாக வசூலாகி உள்ளது என அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்ட பஸ்கள், கடந்த ஆண்டைக் காட்டிலும் 50 சதவீத கூடுதல் வசூல் சாதனை படைத்துள்ளன. கோவை கோட்ட பஸ்களில் மூன்று நாள்களில் ரூ. 10.5 கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும், ரூ. 50 லட்சம் அதிகம் என அதன் உயர் அதிகாரி தெரிவித்தார்.
இதுபோல், அரசு போக்குவரத்துக்கழக பிற கோட்ட பஸ்களும் இந்த முறை வசூல் சாதனை படைத்துள்ளனவாம். இதேபோல ஒவ்வொரு முறையும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் புத்திசாலித்தனமாகவும், சாதுரியமாகவும், துரிதமகாவும் செயல்பட்டால் பாசஞ்சர்ஸுக்கும் நல்லது, போக்குவரத்துக் கழக பர்ஸுகளுக்கும் நல்லது. பிறகு எப்படி வரும் நஷ்டம்..












Click it and Unblock the Notifications