தூத்துக்குடி, அவிநாசி, கொட்டாம்பட்டி.. 3 விபத்துகள்: 7 பேர் பலி-பார்க்க வந்தவரும் விபத்தில் பலி
தூத்துக்குடி, மதுரை & அவிநாசி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நின்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதியதில் வேனில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர்.
சாத்தூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த 12 பேர் கேரளா சென்றுவிட்டு வேனில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று காலை 5 மணியளவில் கயத்தாறு ராஜாபுதுக்குடி விலக்கு அருகே வந்தபோது வேனில் டீசல் கசிவு ஏற்படே அதை சாலை ஓரத்தில் நிறுத்தினர்.
அப்போது அங்கு வந்த லாரி வேன் மீது மோதியது. இதில், வேனில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவிநாசி அருகே லாரி-கார் மோதல்; டிரைவர் பலி:
அதே போல கேரளாவில் இருந்து சேலத்திற்கு மாடு வாங்க 3 வியாபாரிகள் காரில் வந்தனர். அவர்களுடன் சிறுவனும் வந்தான்.
அதிகாலை 3.30 மணி அளவில் அவிநாசி அருகே அவிநாசிலிங்கம் பாளையத்தில் உள்ள மேம்பாலத்தில் வந்தபோது சோப்பு லோடு ஏற்றி வந்த லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
மோதிய வேகத்தில் லாரி மேம்பாலத்தில் இருந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் டிரைவர் சுபேதர் பரிதாபமாக உயிரிழுந்தார். காரில் இருந்த சிறுவனை தவிர மற்று 3 பேரும் படுகாயமடைந்தனர். லாரியை ஓட்டி வந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ஜானகிராமன் (35) என்பவரும் படுகாயமடைந்தார்.
அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
இந்த இடம் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியாக மாறி வருகிறது. கடந்த 1 மாதத்தில் மட்டும் இதுவரை 3 பேர் இதே இடத்தில் இறந்துள்ளனர்.
இந்தப் பாலத்தில் ரிப்ளக்டர் கூட இல்லாதது விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.
லாரி மீது பஸ் மோதி 2 பேர் பலி-விபத்தை பார்க்க வந்தவர் வாகனம் மோதி பலி:
இந் நிலையில் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதியதில் 2 பேர் உயிர் இழந்தனர்.
இந்த விபத்து நடந்த இடத்தைப் பார்க்க வந்த ஒருவர் இன்னொரு வாகனம் மோதி பலியானார்.
சேலத்தில் இருந்து கொட்டாம்பட்டி வழியாக திருப்பத்தூர் செல்லும் அரசு பஸ் பள்ளப்பட்டி அருகே வந்த போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில், அரசு பஸ்சின் நடத்துனரான முருகேசனும் (40), இன்னொரு பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து நடந்த இடத்தைப் பார்க்க வந்த பெருமாள் (55) வேகமாக சாலையைக் கடந்த போது, ஒரு வாகனம் மோதி சாலையில் உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்று விட்டது. இதை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications