வாச்சாத்தி மலைவாழ் மக்கள் மீதான குற்றப்பத்திரிக்கை ரத்து: உயர்நீதிமன்றம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினரை தாக்கி கொல்ல முயன்றதாக மலைவாழ் மக்கள் மீது போடப்பட்டிருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மலைவாழ்மக்கள் மீதான குற்றப்பத்திரிக்கையையும் ரத்து செய்து கோர்ட் உத்தரவிட்டது.
தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ம் தேதி சந்தன மரங்கள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினரும், போலீசாரும் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மலைவாழ் மக்களை போலீசார் கடுமையாக தாக்கியதுடன், பெண்களை பலாத்காரம் செய்யதனர். ஆனால் சந்தன மரங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இதுதொடர்பான வழக்கு 19 ஆண்டுகள் நடந்தது. விசாரணை முடிவில், குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை மற்றும் வனத்துறையைச் சேர்ந்த 215 பேருக்கும் உரிய தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சரித்திரப் புகழ்வாய்ந்த இந்த தீர்ப்புக்கு மலைவாழ்மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். காலம் கடந்தாகிலும் தங்களுக்கு நியாயம் கிடைத்தது என கூறினர்.
இந்த நிலையில் போலீசாரை தாக்கியதாகவும், வனத்துறை அதிகாரிகளை தாக்கி கொல்ல முயன்றதாகவும் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த 98 பெண்கள் உள்பட 105 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் மீது அரூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், தங்கள் மீதான வழக்கில் முகாந்திரம் இல்லை என்றும், எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாச்சாத்தி பெண்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அக்பர் அலி, மலைவாழ் மக்கள் மீதான வழக்கில் போதிய முகாந்திரம் இல்லை என்று கூறி அதனை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் அரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையையும் ரத்து செய்தார்.












Click it and Unblock the Notifications