குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் 3 வழக்குகளில் பி.ஆர்.பி.க்கு ஜாமீன்

அரசு புறம்போக்கு நிலங்கள், பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பாசன கண்மாய்கள் மற்றும் கால்வாய்களை ஆக்கிரமித்து கிரானைட் கற்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்ததற்காக பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி மீது போலீசார் 35 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து போலீசார் பழனிச்சாமியை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். ஆனால் இந்த வழக்குளில் தொடர்புடைய பி.ஆர்.பி.யின் மகன்கள் தலைமறைவாக உள்ளனர்.
இந்நிலையில் பி.ஆர்.பி.யின் ஜாமீன் மனு மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது வழக்கறிஞர் கூறுகையில், சி.சி.கண்மாய் ஆக்கிரமிப்பு, சட்டவிரோதமாக கிரானைட் வெட்டி எடுத்தது மற்றும் தாமரைப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு தொடர்பாக பழனிச்சாமி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் அவருக்கு ஜாமீன் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இம்மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜெய்குமார், பி.ஆர். பழனிச்சாமிக்கு இந்த 3 வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதாவது அவர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும்.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று கீழவளவு, மேலூர், ஒத்தக்கடை மற்றும் மேலவளவு ஆகிய காவல் நிலையங்களில் பதிவான 15 வழக்குகளில் ஜாமீன் கோரிய பழனிச்சாமியின் மனுக்களை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜெய்குமார், அதில் 12 வழக்குகள் தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்தார். மேலும் கவட்டையன்பட்டியில் உள்ள அய்யனார் கோயில் நில மோசடி குறித்து மேலவளவு போலீசார் பதிவு செய்த வழக்கு மற்றும் மேலூர் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கு ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் 19ம் தேதி நீதி்மன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications