துபாயில் சிறையில் இருந்து 27 ஆண்டுக்குப் பின் திரும்பிய தமிழர் வைகோவிற்கு நன்றி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் பால் ஜார்ஜ் நாடார். இவர் கடந்த 1977-ம் ஆண்டு வேலைக்காக துபாய் நாட்டுக்குச் சென்றார். அப்போது அவர் தன்னுடன் தன் மனைவி மற்றும் 2 வயது மகள் சுமித்ரா ஆகியோரை அழைத்து சென்றார்.
கடந்த 1985-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந்தேதி இரவு நடந்த தீ விபத்து ஒன்றில் குடிசைக்குள் தூங்கிக் கொண்டிருந்த 2பாகிஸ்தான் பெண்கள் மற்றும் அவர்களது 7 குழந்தைகள் ஆக மொத்தம் 9 பேர் உடல் கருகி செத்தனர். இந்த வழக்கு தொடர்பாக துபாய் போலீசார் பால் ஜார்ஜ் நாடாரை கைது செய்து சிறையில் அடைந்தது. சுமார் ஓராண்டு நடந்த 9 பேர் கொலை வழக்கில் 1986-ம் ஆண்டு தீர்ப்பளித்த கோர்ட்டு, பால் ஜார்ஜ் நாடாருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து 10 ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு 1996-ம் ஆண்டு சுமார் 16 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நஷ்டஈடாகப் பெற்றுக் கொண்டனர். அதற்கு பதிலாக பால் ஜார்ஜ் நாடாரை மன்னித்துவிட்டதாக கூறி அவர்கள் கோர்ட்டில் கடிதம் கொடுத்தனர். என்றாலும் பால் ஜார்ஜ் நாடார் விடுவிக்கப்படவில்லை. துபாய் ஜெயிலில் தனி செல்சில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு 2010-ம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. 27 ஆண்டுகாலம் சிறையில் இருந்த பால் ராஜ் நாடார் தற்போது விடுதலை செய்யப்பட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். துபாயில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த பால் ஜார்ஜ் நாடாரை அவரது மனைவி மேரி, மகள் சுமித்ரா, மகன் சாயா ஆகியோர் வரவேற்றனர். 39வயதில் சிறை சென்ற பால் ஜார்ஜ் நாடாருக்கு தற்போது 66 வயதாகிறது.
வைகோவுக்கு கடிதம்


இந்த நிலையில் தமிழகம் திரும்பியுள்ள பால் ஜார்ஜ் நாடார், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில் மரணதண்டனை விதிக்கப்பட்டு துபாய் சிறையில் இருந்த போது நாடாளுமன்றத்தில் தனக்காக குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேசி தன் உயிரை காப்பாற்றியதாக குறிப்பிட்டுள்ளார். தன்னைப் போல துபாய் சிறையில் வாடும் பல தமிழர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பால் ஜார்ஜ் நாடார் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications