முகரம்: மதுரை அருகே தீ மிதித்து அனுஷ்டித்த இந்துக்கள்!

உலகம் முழுவதும் இன்று முகரம் அனுஷ்டிக்கப்படுகிறது. கர்பாலா என்ற இடத்தில் நபிகள் நாயகம் முகமதுவின் பேரனான இமாம் ஹூசேன் (ரஜி அன்) மற்றும் அவரின் குடும்பத்தினர் இஸ்லாமிய மத கட்டளையைப் பாதுகாக்கும் பொருட்டு தங்களின் இன்னுயிரை ஈந்து தியாகம் புரிந்த நாளே முகரமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், கொள்கைக்காக மடிந்த இமாம் மற்றும் அவரது குடும்பத்தினரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் முகரம் தினத்தன்று ஊர்வலங்களை நடத்துகிறார்கள்.
இமாம் காட்டிய மனிதநேய வழியில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இஸ்லாமியர்களுக்கு மட்டுமே உரிய இந்த பண்டிகையை காலம் காலமாக இந்துக்களும் கடைபிடிக்கின்றனர் என்பது ஆச்சரியமான விசயம். திருப்புவனம் அருகே முதுவன் திடல் என்ற கிராமத்தைச் சேர்ந்த இந்துக்கள் ஆண்டுதோறும் முகரம் பண்டிகையை ஒட்டி தீ மிதித்து இதனை அனுஷ்டித்து வருகின்றனர்.
முதுவன் திடலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான இஸ்லாமியர்கள் வசித்து வந்தனர். இதனையொட்டி இந்த ஊரில் இஸ்லாமியர்களும், இந்துக்களும் இணைந்து ரம்ஜான், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது வாடிக்கை.
இங்குள்ள பாத்திமா பள்ளிவாசல் பிரசித்தி பெற்றது. நாளடைவில் இங்கு வசித்த இஸ்லாமியர்கள் அனைவரும் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்திற்கு இடம் பெயர்ந்து விட்டனர். ஆனாலும் இங்குள்ள இந்துக்கள் அனைவரும் இஸ்லாமியர்களின் பண்டிகையை தவறாது கொண்டாடுகின்றனர். பள்ளிவாசலையும் பராமரித்து வருகின்றனர்.
இன்று முகரம் பண்டிகை என்பதால் அதிகாலை 3 மணிக்கு பள்ளிவாசல் முன்பு 15 அடி ஆழத்தில் குழி வெட்டி அதில் தீ வளர்த்து மிதித்தனர். இதற்காக இவர்கள் ஒரு வாரம் விரதம் கடைபிடித்துள்ளனர்.
பெண்கள் அனைவரும் தீ மிதித்த பின்னர் முக்காடு போட்டுக்கொண்டு தங்கள் தலையில் தீயை அள்ளி கொட்டிக்கொண்டனர். இவ்வாறு செய்வதன் மூலம் பேய், பிசாசு எதுவும் அண்டாது என்பது நம்பிக்கை.
உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் மட்டுமே அனுஷ்டிக்கும் முகரம் நாளை தமிழ்நாட்டில் இந்து சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு கிராம மக்கள் கடைபிடிப்பது மத நல்லினக்கத்திற்கு உதாரணமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications