கசாப் மரணத்திற்கு பழிவாங்க கர்நாடகாவையும் குறிவைக்கும் லஷ்கர் இ தொய்பா
பெங்களூர்: கசாபை தூக்கிலிட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கர்நாடகாவை தாக்கக்கூடும் என்று தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கசாபின் மரணத்திற்கு பழிவாங்க ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலை தாக்கப் போவதாக பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் இ மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த இமெயில் கர்நாடகத்தில் உள்ள இன்டர்நெட் சென்டரில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கர்நாடகாவையும் தாகக்கக்கூடும் என்ற தகவல் கிடைத்துள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடக துணை முதல்வர் ஆர். அசோக் கூறுகையில்,
அஜ்மல் கசாபின் மரணத்திற்கு பழிவாங்க கர்நாடகாவை தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்ற தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுக்காதபோதிலும் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மாநிலத்தில் உள்ள முக்கிய இடங்களில் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். லஷ்கர் இ தொய்பா மற்றும் ஹூஜி அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட 15 பேரை டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கத் தயார் என்றார்.












Click it and Unblock the Notifications