பேய் பிடித்ததாக நினைத்து பெண்ணை 5 ஆண்டுகளாக பாழடைந்த வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை
ஹைதராபாத்: ஆந்திராவில் பேய் பிடித்ததாக நினைத்து தனது மனைவியை பாழடைந்த வீட்டில் 5 ஆண்டுகளாக அடைத்து வைத்து உணவு கூட கொடுக்காமல் ஒரு கணவர் சித்ரவதை செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கொத் வள்ளியைச் சேர்ந்தவர் முகமத் சத்தார். அவரது மனைவி ஷாகிரா பேகம் (45). அவர்களுக்கு 18 வயதில் மகள் ஒருவர் உள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஷாகிராவின் மனநிலை பாதிக்கப்பட்டதால் சத்தார் 2வது திருமணம் செய்தார். இருப்பினும் முதல் மனைவியுடன் ஒன்றாக குடுபம் நடத்தினார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஷாகிரா ரகளை செய்யத் துவங்கினார். திடீர் என்று தெருவில் ஓடிவிடுவார். இதனால் மனைவிக்கு பேய் பிடித்துவிட்டது என்று நினைத்த சத்தார் ஷாகிராவை தனக்கு சொந்தமான பாழடைந்த வீட்டில் யாருக்கும் தெரியாமல் வைத்து பூட்டினார். மேலும் சுவரில் ஓட்டை போட்டு அதன் வழியாக உண்வு, தண்ணீர் கொடுத்தனர்.
சத்தார் வீட்டில் ஷாகிரா இல்லாதது குறித்த அறிந்த கிராம மக்கள் அவர் எங்காவது ஓடிவிட்டார் போலும் என்று நினைத்தனர். இதற்கிடையே பூட்டிய வீட்டில் அடைபட்டுக் கிடந்த ஷாகிரா அங்கிருந்து தப்பியோட முயன்றார். உடம்பில் வலு இருப்பதால் தான் அவர் ஓட முயறச்சிக்கிறார் என்று சாப்பாடும், தண்ணீரும் அளிப்பதை படிப்படியாக நிறுத்தினர். இந்த கொடுமை 5 ஆண்டுகளாக நடந்துள்ளது.
இந்நிலையில் முஹரம் பண்டிகையையொட்டி அந்த கிராமத்தில் நடந்த ஊர்வலம் ஷாகிரா அடைக்கப்பட்டிருந்த பாழடைந்த வீடு வழியாகச் சென்றது. அப்போது அவர் ஓட்டை வழியாக கையை வெளியே விட்டு பசிக்கு உணவு கேட்டுள்ளார். மேலும் தண்ணீர் தருமாறும் கேட்ட அவர் தன்னை காப்பாற்றும்படி அலறியுள்ளார். அப்போது தான் அந்த பாழடைந்த வீட்டில் ஒரு பெண் அடைக்கப்பட்டுள்ளதே ஊர் மக்களுக்கு தெரிய வந்தது.
இது குறித்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த ஷாகிராவை மீட்டனர். அவரை காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications