யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது போலீசாருடன் இணைந்து இலங்கை ராணுவம் தாக்குதல்
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது போலீசாருடன் இணைந்து இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நவம்பர் 27-ந் தேதியன்று தமிழீழ மாவீரர் நாள் நினைவு நிகழ்வு கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வைத் தடுக்க போலீசாரும் ராணுவத்தினரும் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். ஆனால் தடையை மீறி மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இருப்பினும் போலீசாரின் தலையீட்டைக் கண்டித்து நேற்று மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் பல்கலைக் கழகத்திலிருந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசாரும் ராணுவத்தினரும் கடுமையாகத் தாக்குதலை நடத்தினர். இதில் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.
மாணவர்கள் மீதான தாக்குலுக்கு தமிழ் இளையோர் நடுவம் கண்டனம்:
யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் மீதான தாக்குலுக்கு டென்மார்க் தமிழ் இளையோர் நடுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழீழ தேசிய மாவீரர் நாளான்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிகளுக்குள் கதவுகளை உடைத்து பலாத்காரமாக நுழைந்த சிறிலங்கா ஆக்கிரமிப்பு படையினர் மாணவர்களின் தலைகளில் துப்பாக்கிகளை வைத்துக் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் விடுதியினையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். சிறிலங்கா படைகளின் தாக்குதல்களை கண்டித்து அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்ட மாணவர்கள் மீது பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் குவிக்கப்பட்டிருந்த சிறிலங்கா படையினரும் காவல்துறையினரும் ஈவிரக்கமற்ற தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தொடர்பான செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களும் சிறிலங்கா ஆக்கிரமிப்பு படையினரின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா ஆக்கிரமிப்பு படையினரும், காவல்துறையினரும் கூட்டாக மேற்கொண்ட இக்காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை டென்மார்க் தமிழ் இளையோர் நடுவம் வன்மையாகக் கண்டிக்கின்றது. தமிழீழத்தின் எதிர்காலச் சிற்பிகளான எமது சக இளையோர் மீது ஆக்கிரமிப்பு படையினர் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதல்களை டென்மார்க் அரசிடமும் அனைத்துலக சமூகத்திடமும் நாம் முறையிடவுள்ளோம. அதேநேரம் டென்மார்க்கில் வாழும் தமிழ் இளையோர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழ பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பை வலியுறுத்துவதுடன் தமிழீழ மாணவர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கவும் எம்முடன் இணைந்து செயலாற்ற வருமாறு வேண்டுகின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications