ஒருதலைக்காதல்: பெண் எஞ்சினியர் முகத்தில் ஆசிட் வீச்சு; பார்வை பறிபோனது
சென்னை: காரைக்காலில் காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசியதில் அவரின் முகம் சிதைந்து போனது. இரண்டு பார்வையும் பறிபோய், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
காரைக்கால், புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள என்ஜினீயர்ஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் வினோதினி (வயது 23). பி.டெக் முடித்து விட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
காரைக்கால் அருகே உள்ள திருவேட்டக்குடியை சேர்ந்த சுரேஷ் என்பவர் வினோதினியை ஒரு தலையாக காதலித்து வந்தார். அவரது காதலை வினோதினி ஏற்கவில்லை. வினோதினியின் பெற்றோரிடம் சுரேஷ் கேட்டதற்கு அவர்களும் மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் வினோதினி காரைக்காலில் உள்ள தனது குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி விட்டு மீண்டும் சென்னை திரும்புவதற்காக கடந்த 14-ந் தேதி இரவு காரைக்காலில் இருந்து சென்னைக்கு பஸ் ஏறுவதற்காக தனது தந்தை ஜெயபால், குடும்ப நண்பர் பத்மநாபன் ஆகியோருடன் காரைக்கால் புதிய பஸ்நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சுரேஷ் வினோதினியின் மீது ஆசிட்டை அடித்துள்ளார் இதில். இதில் வினோதினியின் முகம், கழுத்து, கை, மார்பு, மற்றும் வயிற்றுப்பகுதி முழுவதும் பாதிப்படைந்தது. தந்தையும், குடும்ப நண்பர்கள் மீதும் ஆசிட் தெரித்து அவர்கள் காயமடைந்தனர்.
இதனையடுத்து மூவருக்கும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பார்வை பாதிப்பு
ஆசிட் வீச்சில் வினோதினியின் கண்பார்வை நரம்புகள் பாதிப்படைந்ததால் அவரது இரண்டு கண்களின் பார்வையும் பறிபோனது. முகத்தில் 40 சதவிகிதம் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தற்போது ஆபத்தான கட்டத்தில் விநோதினி இருப்பதால் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் அவரது உடலில் பாதிப்படைந்த பகுதிகள் ஒவ்வொன்றாக ஆபரேஷன் மூலம் சரி செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.
காதலிக்க மறுத்த காரணத்தில் இளம்பெண் ஒருவரின் முகத்தில் ஆசிட் ஊற்றிய சம்பவம் காரைக்கால் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications