சாமி சிலைகள், அரசியல்வாதிகளுக்கு பண மாலை: தடை விதிக்க ரிசர்வ் வங்கி திட்டம்

இந்தியா முழுவதும் சாமி சிலைகளுக்கு திருவிழாக் காலங்களில் பணத்தால் அலங்காரம் செய்யப்படுகிறது. திருமணத்தின் போது மணமக்களுக்கும், பொருட்களை அலங்கரிக்கவும், வழிபாட்டுத் தலங்களிலும் ரூபாய் நோட்டுக்கள் அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அரசியல்வாதிகளுக்கு பிறந்தநாள் தினத்தில் பணமாலை அணிவிக்கும் பழக்கம் உள்ளது. உத்தரபிரதேச முதலமைச்சராக மாயாவதி இருந்தபோது அவரது பிறந்தநாளில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பணமாலை போடப்பட்ட சம்பவம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திரிபாதி எனபவர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ரிசர்வ் வங்கி கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பில், ‘ரூபாய் நோட்டுக்களை மாலை கட்டவோ, அலங்கரிக்கவோ பயன்படுத்துவதால் அது எளிதில் சேதமடையும் வாய்ப்பு உள்ளது. அதன் மதிப்பு சீக்கிரம் மங்கிப் போகும். ரூபாய் நோட்டுக்கள் என்பது ஒரு நாட்டின் அடையாளச் சின்னமாக விளங்குவதால் அதைப் பொது மக்கள் எவ்விதத்திலும் தவறாகப் பயன்படுத்தி அவமதிக்கக் கூடாது' எனத் தெரிவித்திருந்தது.
ஆனால் இந்த உத்தரவை யாரும் மதிக்கவில்லை. தொடர்ந்து அரசியல் தலைவர்களுக்கு ரூபாய் மாலை அணிவிக்கப்படுகிறது. சாமி சிலைகளுக்கும் ரூபாய் நோட்டு மாலை அணிவிக்கப்படுகிறது. பஸ் கண்டக்டர்கள் பயணிகளிடம் இருந்து பெறும் ரூபாய் நோட்டுகளை கைவிரல் இடுக்குகளில் வைத்துக் கொள்கிறார்கள்.
எனவே இது போல் ரூபாய் நோட்டுகளை கண்டபடி அவமானப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று திரிபாதி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள், ரூபாய் நோட்டு மாலை சம்பந்தமான சில தகவல்களையும் இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இது போன்று ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுக்களை அவமதிக்கும் இந்தச் செயலை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தனர். தற்போது இது பற்றி விரைவில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என ரிசர்வ் வங்கி பதில் கூறி இருக்கிறது.
பணமாலைக்குத் தடை விதிக்கப்படும் பட்சத்தில் தலைவர்கள் இனி பிறந்தநாள் கொண்டாட்டங்களையே தவிர்த்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications