21 வயது வரை பெற்றோர் சம்மதமின்றி கல்யாணம் செய்யக் கூடாது- ராமதாஸ்

தர்மபுரி வந்த ராமதாஸ் அங்கு செய்தியாளர்களிடம் பேசியதாவது
ஈவ்-டீசிங் தடுப்புக்குத் தமிழக காவல் துறையில் தலித் அல்லாத போலீஸாரைக் கொண்டு தனிப் பிரிவு ஏற்படுத்த வேண்டும்.
சமூக நல்லிணக்கத்துக்காகவும், ஒற்றுமைக்காகவும் 14 மாவட்டங்களில் மாநாடு நடத்தியது பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும்தான். வாழ்நாளில் இதுவரை தலித்களுக்கு எதிராகப் பேசியதும் இல்லை. எழுதியதும் இல்லை. ஆனால், தங்களது இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களைத் தவறான பாதைக்கு வழி நடத்திச் செல்லும் திருமாவளவன், பாமக மீதும் அதன் தலைவர்கள் மீது குறை கூறி பேசுகிறார். இத்தகைய செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நாயக்கன்கொட்டாய் வன்முறைக்கு காதல் திருமணமோ, பெண்ணின் தந்தை தற்கொலையோ, பாமகவோ, வன்னியர் சங்கமோ காரணமில்லை. அந்தக் கிராமத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த பெண்களை கேலி செய்யும் பழக்கமும், இளம்பெண்கள் மீதான தொடர் அத்துமீறல்களும்தான் இத்தகைய வன்முறைக்குக் காரணமாக அமைந்துவிட்டது.
காதல் திருமணம், கலப்புத் திருமணங்களால் தமிழ் தேசியம் மலரும் என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை. தலித் இளைஞர்கள் படித்து பட்டம் பெறவும், வேலை தேடவும், பொருளாதாரத்தில் முன்னேறவும் திருமாவளவன் அறிவுறுத்த வேண்டும்.
தமிழகத்தில் தலித் அல்லாத சமூகத்தினர் மீது வன்கொடுமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இதனால்தான், இந்தச் சட்டத்துக்கு எதிராகவும், காதல் நாடக திருமணங்களுக்கு எதிராகவும் 81 சதம் பேர் ஓரணியில் திரண்டுள்ளனர்.
நாயக்கன்கொட்டாய் வன்முறைச் சம்பவத்தை அடுத்து தலித் அதிகாரிகள் பலர் அரசுப் பணத்தையும், அரசு நிர்வாகத்தையும் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். காவல் துறை இனி யாரையும் கைது செய்ய மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications