'என்கவுண்டர்' வெள்ளைத்துரையை கைது செய்யக்கோரி மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: ஆல்வின் சுதன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது மானாமதுரையில் நடைபெற்ற என்கவுண்டரை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்பு வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதியன்று மருதுபாண்டியர் குருபூஜை விழாவின் போது அஞ்சலி செலுத்த சென்றவர்களில், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பாசேத்தி சார்பு ஆய்வாளர் ஆல்வின் சுதனை பிரபு தரப்பினர் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்தநிலையில் 30.11.12 அன்று ஒரு வழக்கில் சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்க்காக பிரபு மற்றும் பாரதி ஆகியோரை மதுரை மத்திய சிறையிலிருந்து போலீஸ் வேன் ஒன்றில் அழைத்துவரப்பட்டனர். இதில் இருவரும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்களை தேடிவந்த போலீசார் மானாமதுரை அருகே தீத்திப்பேட்டை கிராமத்தில் வயல் பகுதியில் சுற்றி வளைத்தனர். டி.எஸ்.பி வெள்ளத்துரை தலைமையிலான காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் பிரபு மற்றும் பாரதி ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தை கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மானாமதுரை டி.எஸ்.பி வெள்ளத்துரையை கைது செய்யக்கோரி முழக்கமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications