குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தால் உரிமையாளருக்கு 2 ஆண்டு ஜெயில்: மசோதா தாக்கல்
டெல்லி: குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் முதலாளிக்கு 2 ஆண்டு சிறைதண்டனை விதிக்கும் சட்டதிருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்குச் செல்லும் பாலகர்களை அபாயகரமான பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று தற்போது அமலில் உள்ள குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்காக பல தொழிற்சாலைகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு பள்ளிக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தை மாற்றி, எந்த தொழிலிலும் குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்த தடை விதிக்க புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதன்படி இனி எந்த தொழிலிலும் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வேலைக்கு சேர்த்தால், முதலாளிக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ‘குழந்தை தொழிலாளர் தடுப்பு மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத் திருத்த மசோதா'வை, மாநிலங்களவையில் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்கிழமை தாக்கல் செய்தார். அந்த மசோதாவில்,"எந்த தொழிலிலும் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வேலையில் சேர்ப்பதற்கு முழு தடை விதிக்கப்படுகிறது.
அப்படி குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்துவோருக்கு அதிகபட்சம் 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், அபாயகரமான தொழிற்சாலைகளில் 18 வயதுக்கு உட்பட்டவர்களை பணிக்கு சேர்க்கவும் தடை விதிக்கப்படுகிறது.
அபாயம் இல்லாத தொழிற்சாலைகளில் வேலைக்கு சேர்க்கப்படும் இளைஞர்களுக்கு சர்வதேச தொழிலாளர் விதிமுறைகளின்படி தேவையான வசதிகள் செய்யப்பட வேண்டும்."என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications