எதிர்கட்சி தலைவர் விஜயகாந்தை ஜெ. அரசு தரக்குறைவாக நடத்தக் கூடாது: பொன். ராதாகிருஷ்ணன்
புதுக்கோட்டை: மக்கள் செல்வாக்கே இல்லாத ப. சிதம்பரத்தை பிரதமர் வேட்பாளராக்கும் கருத்து நாட்டின் மீது அக்கறை இல்லாதவர்களின் கருத்து என்று பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் 15 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் கருகும் அபாயத்தில் உள்ளது. அதனால் பிரதமர் மன்மோகன் சிங் காவிரி பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இது தொடர்பாக தமிழகம் மற்றும் புதுவை எம்.பி.க்கள் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
காவிரி பிரச்சனை குறித்து பேச தமிழக அரசு கர்நாடக அரசைப் போன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வலுவான கட்சியாக உறுவெடுக்கும். தமிழக சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் பதவிக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. அதனால் தமிழக அரசு தேமுதிக தலைவர் விஜயகாந்தை தரக்குறைவாக நடத்துவதை விட்டுவி்டடு அவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்.
இலங்கை பிரச்சனையில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கு பொறுப்பு இருப்பதால் அதை தட்டிக்கழிக்க முடியாது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருவது கடும் கண்டனத்திற்குரியது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் திமுக திடீர் பல்டி அடித்ததன் காரணத்தை கருணாநிதி தன் கட்சி தொண்டர்களுக்காவது தெரிவிக்க வேண்டும். இப்படி இரட்டை நிலைப்பாட்டை எடுப்பது ஒன்றும் அவருக்கு புதிதன்று.
மத்தியில் மதவாத ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காக காங்கிரஸை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள கருணாநிதி 1999ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கொடியுடன் வாக்கு கேட்டு செல்லயில்லையா. சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் தூதர் குலாம்நபி ஆசாத்துக்கும், கருணாநிதிக்கும் இடையே திரைமறைவில் நடந்த பேரம் குறித்து பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அன்னிய முதலீடு குறித்து மத்திய அமைச்சரவை முடிவு எடுத்தது திமுக அமைச்சர்களுக்கு தெரியாதா. மக்கள் செல்வாக்கே இல்லாத ப.சிதம்பரத்தை பிரதமர் வேட்பாளராக்க வேண்டும் என்று கூறப்படும் கருத்து நாட்டின் மீது அக்கறையில்லாதவர்களின் கருத்து என்றார்.












Click it and Unblock the Notifications