நாஞ்சில் சம்பத்தை 'வாங்கியதா' அதிமுக?
சென்னை: அங்கே போகிறார்... இங்கே இணையப் போகிறார் என்று இரண்டு மாதமாக மீடியாக்காரர்களை சுத்தலில் விட்ட நாஞ்சில் சம்பத் இப்போது அதிமுகவில் ஒரு வழியாக ஐக்கியமாகிவிட்டார். இவர் அதிமுகவில் இணைவதற்கு முன்பு பல இடங்களில் பேரம் பேசி அது படியாமல் அதிக விலைக்கு பேரம் படிந்த அதிமுகவில் இணைந்துள்ளார் என்று கிசுகிசுக்கின்றனர் மதிமுகவினர்.

லகரமும் பதவியும்…
நாஞ்சில் சம்பத் முதலில் பேசியது திமுக பிரமுகர் கே.எஸ். ராதகிருஷ்ணனிடம்தானாம். ஒரு குறிப்பிட்ட அமெளண்டைச் சொல்லி அதையும், பதவியையும் கொடுத்தால் திமுகவில் இணைந்து கொள்வதாக கூறினாராம் சம்பத். ஆனால் இதைக்கேட்ட கே.எஸ். ராதகிருஷ்ணன், லகரத்தை நீங்க கொடுத்துட்டு திமுகவுல சேர்ந்துக்கங்க என்றாராம்.

தேமுதிகவுக்கு ஒரு தாக்கல்
ஷாக் ஆகிப் போன சம்பத் 'பேக்' அடித்துவிட்டார் என்கிறார்கள். இதை அடுத்து தேமுதிகவில் இணைய தூது விட்டாராம். அங்கே இவருக்கு நோ எண்ட்ரி கார்டு போட்டு விட்டனர்.

அதிக விலை கொடுத்த அதிமுக
இப்படி அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்த சம்பத்துக்கு அதிமுகவிலிருந்து சாதகமான பதில் வந்து சேர்ந்ததாம். அவருக்கு அங்கு சில உறுதிமொழிகள் அளிக்கப்படவே கடைசியில் அங்கே தஞ்சம் புகுந்துவிட்டார் என்றும் கூறுகின்றனர் மதிமுகவினர்.

கடைநிலை தொண்டர்களின் அதிருப்தி
மதிமுகவில் இருந்து வெளியேறிய எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், பொன்.முத்துராமலிங்கம், கண்ணப்பன் உள்ளிட்ட யாரும் வைகோவை விமர்ச்சிக்கவில்லை. ஆனால் வைகோ மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த சம்பத் கடந்த ஒரு மாதகாலமாக வைகோவை விமர்ச்சித்து வந்தார். இதனால்தான் கடைநிலை தொண்டர்கள் கூட சம்பத்தை காழ்ப்புணர்ச்சியுடன் பார்க்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

சம்பத்துக்கு சம்பளம் எவ்வளவு?
சம்பத் மதிமுகவில் ஒரு கூட்டத்தில் பேசினால் அவருக்கு 10,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். அதேசமயம் அதிமுகவில் அவருக்கு 25,000 ரூபாய் ஒரு கூட்டத்திற்கு வழங்கப்படுமாம். இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சிதான். எனவே வாரந்தோறும் கூட்டம் நடைபெறும், அதில் பேச வாய்ப்பு வழங்கப்படும்.

குடும்பத்தினருக்கு சலுகைகள்
இது தவிர தன் மீது உள்ள 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், குடும்ப உறுப்பினர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்தும் சம்பத் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டதாக மதிமுக தரப்பில் கூறப்படுகிறது.

நீக்கட்டும் பார்க்கலாம் என்ற சம்பத்
சம்பத் வேறு கட்சியில் சேரப் போவதாக தகவல் வெளியான சமயத்தில் மதிமுகவில் இருந்து நானாக விலகமாட்டேன். அவர்களாக நீக்கட்டும் பார்க்கலாம். எந்த அரசியல் கட்சியிலும் சேரமாட்டேன். தமிழ் எனக்கு வாழ்வளிக்கும் என்று பேசி வந்தார். தற்போது திடீரென்று அதிமுகவில் இணைந்துவிட்டார் சம்பத். சூட்டோடு சூடாக அவருக்கு துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது .











Click it and Unblock the Notifications