மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நிலவி வரும் கடும் மின்வெட்டால் ஜெனரேட்டர்களுக்கு தட்டுப்பாடாக உள்ளது.
தமிழகத்தில் மின்பாற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இரவு, பகல் பாராமல் மின்தடை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் பகல் பொழுதை எப்படியாவது கழித்துவிட்டாலும் இரவில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சிறிய மூல்பபொருட்கள் உற்பத்தி செய்வோரும், கட்டுமானத் தொழில் செய்வோரும் ஜெனரேட்டர்களை மாதக் கணக்கில் வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகிறார்கள். மேலும் திருமணம் போன்ற வீட்டு விசேஷங்களுக்கும் ஜெனரேட்டரை வாடகைக்கு எடுக்கிறார்கள்.
இதனால் ஜெனரேட்டர்களுக்கு கடும் கிராக்கியாக உள்ளது. நெல்லையில் உள்ள சில வங்கிகள், தனியார் அலுவலகங்களும் ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றன. இப்படி அனைவரும் ஜெனரேட்டர் கேட்பதால் அதற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 1,000 வாட் ஜெனரேட்டரை 12 மணிநேரத்திற்கு ரூ.500க்கு வாடகைக்கு விடுவதாக மேலப்பாளையத்தைச் சேர்ந்த சவுண்ட் சர்வீ்ஸ் உரிமையாளர் மகராஜன் தெரிவித்தார்.
மேலும் 24 மணிநேரத்தில் பெரும்பாலான நேரம் மின்சாரமே இல்லாமல் இருப்பதால் இன்வர்ட்டர்களால் போதிய மின்சாரத்தை சேமிக்க முடியவில்லை. இதனால் மக்கள் சத்தம் குறைவான சிறிய ஜெனரேட்டர்களை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இதனால் இத்தனை நாட்களாக ரூ.35,000க்கு விற்பனையான சிறிய ஜெனரேட்டர்கள் தற்போது ரூ. 85,000 வரை விற்கப்படுகிறது.
ஹோட்டல்களில் மிக்ஸி அல்லது கிரைண்டரில் சட்னி அரைக்கிறார்கள். ஆனால் தற்போது பல மணிநேரம் மின்தடை செய்யப்படுவதால் ஹோட்டல்களில் சட்னி வழங்குவதை நிறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications