குற்றாலம் அருவிகளில் சரண கோஷம்... குவியும் ஐயப்ப பக்தர்கள்!
நெல்லை: குற்றாலம், ஐந்தருவி திற்பரப்பு அருவிகளுக்கு தினமும் சபரிமலை சென்றுவிட்டு திரும்பும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

அருவிகளில் குவியும் ஐயப்ப பக்தர்கள்
சபரிமலை சீசனை முன்னிட்டு குற்றாலம், ஐந்தருவி,திற்பரப்பு அருவியில் ஐயப்ப பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மார்கழி வரை நெரிசலாகவே இருக்கும்
கார்த்திகை மாத துவக்கத்தில் குறைந்த அளவில் காணப்பட்ட ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. மார்கழி மாத இறுதிவரை ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிதமாக கொட்டும் தண்ணீர்
மலையோர பகுதிகளில் பரவலாக பெய்து வந்த மழை கடந்த சில நாட்களாக பெய்யாததால் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது. அருவியின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் சிரமமின்றி குளித்து செல்கின்றனர்.

குற்றாலநாதர் கோவில்
காலை, மாலை நேரங்களில் வரும் ஐயப்ப பக்தர்கள் அருவியில் குளித்து அருகில் உள்ள குற்றாலநாதர் ஆலயம், இலஞ்சி குமரன் ஆலயம் மகாதேவர் கோயிலில் தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

மாலையில் மின்வெட்டு..பக்தர்கள் தவிப்பு
குற்றாலம், ஐந்தருவி, திற்பரப்பு பகுதியில் தற்போது மாலை 6 மணி முதல் 7 மணி வரை மின்வெட்டு நடைமுறையில் உள்ளதால் இந்த நேரத்தில் அருவி பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

சோலார் லைட் போடுங்களேன்...
சுற்றுலா பயணிகளின் நலன் கருதி குறிப்பிட்ட பகுதிகளில் சோலார் விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications