வத்தலக்குண்டு மார்க்கெட்டில் 5 கடைகளுக்கு தீ வைப்பு: பொருட்கள் எரிந்து நாசம்
திண்டுக்கல்: வத்தலக்குண்டு மார்க்கெட்டில் 5 கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதில் அவை முற்றிலும் எரிந்து நாசமாகின.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் அருள்முருகன்(42). அவர் வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் பின்புறம் உள்ள மார்க்கெட்டில் வரிசையாக 5 கடைகள் வைத்து நடத்தி வருகிறார். வெங்காயம், காய்கறி மற்றும் பழங்கள் வைத்து விற்பனை செய்து வருகின்றார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணிக்கு அவரது கடைகளுக்கு யாரோ தீ வைத்துவிட்டுச் சென்றனர். கடைகள் தீப் பிடித்து எரிவதைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
வத்தலக்குண்டு நிலைய அலுவலர்கள் முத்துகிருஷ்ணன், குணசகரன் ஆகியோர் தலைமையில் 2 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கடையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.
இது குறித்து கடையின் உரிமையாளர் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், தனது கடைக்கு வேண்டுமென்றே சிலர் தீ வைத்துள்ளனர். இதே போல் ஏற்கனவே 4 முறை தீவைத்து சென்றுவிட்டதாக கூறியிருந்தார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் இது குறித்து காமாட்சிநாதன், சேகர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் தொழில் போட்டி காரணமாக கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.











Click it and Unblock the Notifications