இந்தியாவுக்குள் நுழைய 2008ல் இருந்தே திட்டம் தீட்டி ரூ.125 கோடி செலவிட்ட 'வால்மார்ட்'

சில்லறை வர்த்தகத்தில் ஜாம்பவானாக இருக்கும் வால்மார்ட் இந்தியாவுக்குள் நுழையத் தேவையான நடவடிக்கைகளை கடந்த 2008ம் ஆண்டு முதலே எடுத்துள்ளது. அதற்காக 2008ம் ஆண்டு முதல் இதுவரை அமெரிக்காவில் உள்ள அரசியல் செல்வாக்கு மிக்கவர்களுக்கு ரூ.125 கோடி செலவு செய்துள்ளது.
இவர்கள் அமெரிக்க அரசு மூலம் இந்திய அரசை நெருக்கி சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க வைத்துள்ளனர் என்பதே குற்றச்சாட்டாக உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்த விவாதம் உள்ளிட்டவற்றுக்கு மட்டும் ரூ.10 கோடி செலவிட்டுள்ளது வால்மார்ட்.
அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த அங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் உதவியை நாடலாம். மேலும் இது தொடர்பாக அவர்களுக்கு செலவும் செய்யலாம். ஆனால் அந்த செலவு கணக்கை ஒவ்வொரு காலாண்டிலும் அரசிடம் சமர்பிக்க வேண்டும். அதன்படி வால்மார்ட் சமர்பித்த காலாண்டு கணக்கில் தான் இந்த தகவல்கள் உள்ளன.
இந்தியா உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து காரியம் சாதிக்க இந்த ஆண்டில் மட்டும் வால்மாப்ட் ரூ.18 கோடிக்கும் மேல் செலவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லஞ்சத்தை பெற்றது யார்- ராஜ்யசபாவில் பாஜக கேள்வி:
இந்தியாவுக்குள் நுழைய வால்மார்ட் ரூ.125 கோடி செலவு செய்துள்ளது குறித்து ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அப்போது பாஜக செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், வால்மார்ட் கொடுத்த லஞ்சத்தை பெற்றது யார் என்று அரசு பதில் கூறியே ஆக வேண்டும் என்றார். அதற்குள் எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications