ரொம்ப அடிக்காதீங்க பாஸ், வலிக்குது: கதறும் கரூர் கவுன்சிலர்கள்
கரூர்: கரூர் நகராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் தங்களை அடித்து உதைப்பதாகக் கூறி எதிர்கட்சி கவுன்சிலர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
கரூர் நகராட்சி
கரூர் நகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளது. இதில் அதிமுக 37 வார்டுகளிலும், காங்கிரஸ் 4 வார்டுகளிலும், தேமுதிக 5 வார்டுகளிலும், மதிமுக ஒரு வார்டிலும், திமுக ஒரு வார்டிலும் வெற்றி வெற்றது. நகர் மன்ற தலைவராக அதிமுகவைச் சேர்ந்த தமிழ்நாடு செல்வராஜும், துணை தலைவராக அதிமுகவைச் சேர்ந்த காளியப்பனும் உள்ளனர்.
மக்கள் கோரிக்கை
இந்த நிலையில் கரூர் நகராட்சியில் உள்ள பல்வேறு வார்டுகளில் சாக்கடை சுத்தம் செய்யாதது, தெரு லைட் பராமரிப்பு, குப்பை அள்ளுதல், சாலை போடுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகின்றது. இது போன்ற பிரச்சனைகளை அதிமுக கவுன்சிலர்கள் முன் வைத்தால், உடனே செய்து கொடுப்பதும், எதிர் கட்சிகளான தேமுதிக, திமுக, காங்கிரஸ், மதிமுக கவுன்சிலர்கள் முன்வைத்தால் கண்டும் காணாமல் இருப்பதாவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
அடி உதை
கடந்த முறை நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் ஜெகதீஷ் தனது வார்டு சம்பந்தமாக பேச அதில் வாக்குவாதம் முற்றி அதிமுக, காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அடையாளம் தெரியாத கவுன்சிலர் தாக்கியதாக கூறப்படுகின்றது. இதில் ஜெகதீஷ் சட்டை கிழிந்தது. முன்பு, இதே போல திமுக கவுன்சிலர் நாராயணன் பேசும்போதும் பிரச்சனை வெடித்து அவருக்கு அடி உதை விழுந்தது.
கவுன்சிலர்கள் உண்ணாவிரதம்
வார்டில் பிரச்சனை என்றால் மக்கள் எங்களிடம் தெரிவிக்கின்றனர். நாங்கள் நகராட்சி கூட்டத்தில் தானே சொல்ல முடியும். அதைக் கூட சொல்ல முடியாமல் தவிக்கின்றோம் என கூறி காங்கிரஸின் ஸ்டீபன், ஜெகதீஷ், மதிமுக சத்தியமூர்த்தி, திமுக நாராயணன், தேமுதிகவைச் சேர்ந்த யமுனா உள்ளிட்ட 11 கவுன்சிலர்கள் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர்.
ஒன்று சேர்ந்த எதிர்கட்சிகள்
அதிமுகவை எதிர்த்து திமுக, மதிமுக, காங்கிரஸ், தேமுதிக கட்சிகள் ஓரணியில் திரண்டது. இந்த கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமைய வேண்டும் என்று உண்ணாவிரத மேடையில் பேச வந்த பலரும் கூற கரகோஷம் காதைப் பிளந்தது.
தொடர் போராட்டம்
கரூர் நகராட்சியில் எதிர்கட்சி கவுன்சிலர்களை ஆளும் கட்சியினர் புறக்கணிப்பைதப் போன்று எந்தெந்த நகராட்சியில நடக்கிறதோ அங்கெல்லாம் எதிர்கட்சியினர் ஒன்று சேர்ந்து போராடவிருக்கிறார்களாம்.