சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு தீவிரவாதிகள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு தீவிரவாதிகள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததை அடுத்து போலீசார் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர்.
கடந்த 11ம் தேதி மாவட்ட கலெக்டர் மகரபூசணத்திற்கு மர்ம கடிதம் வந்தது. அதில் சேலம் நகரில் உள்ள முக்கிய இடங்களான மருத்துவமனை, காவல்நிலையங்கள், கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.
மேலும் டிசம்பர் 12-ம்தேதி இந்த வெடிகுண்டு வெடிக்கும் என்றும் இந்த வெடிகுண்டுகளை எடுத்தால் உங்கள் வீட்டிலும் வெடிகுண்டு வெடிக்கும் என்றும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
இந்த கடிதம் குறித்து, கலெக்டர் மகரபூசணம் போலீஸ் கமிஷனர் கே.சி. மஹாலிக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நேற்றிரவு 8 மணிமுதல் இன்று காலை 5 மணிவரை கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அனைத்து இடங்களிலும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தினார்கள். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் அனைவரும் நிம்மதியடைந்தனர்.
அந்த கடிதத்தில் அஜ்மல் கசாப் பெயரும், தீவிரவாத இயக்கத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை எழுதியது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விடிய விடிய நடத்திய சோதனை மூலம் சேலம் போலீசார் நேற்றிரவு தூக்கத்தை தொலைத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications